கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் நாயகன் கீதன் பிரிட்டோ. கீதன் தனது நண்பர்கள் மகேந்திரன், வின்செண்ட்டுடன் சேர்ந்து ஊர் மக்களை எதிர்த்து, சேர முடியாமல் தவிக்கும் காதலர்களை சேர்த்து வைக்கின்றனர்.

பக்கத்து ஊரை சேர்ந்த நாயகி வர்ஷா பொலம்மா பள்ளிக்கு முடித்து கல்லூரியில் சேர்கிறார். வர்ஷாவை பார்த்ததும் கீதனுக்கு அவள் மீது காதல் வந்து வர்ஷா பின்னால் சுற்றுகிறார். இதனால் வர்ஷா வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. வர்ஷாவின் அப்பாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் முன்னாள் வந்து நிற்பவர் வர்ஷாவின் தாய்மாமன் காசிராஜன்.

அவர் வர்ஷாவை திருமணம் செய்து கொள்ளவதாக பெண் கேட்கிறார். அதற்கு வர்ஷாவின் தந்தை மறுக்கவே இருவருக்கும் இடையே பகை ஏற்படுகிறது. இதற்கிடையே கீதன் மீது வர்ஷாவுக்கு காதல் வருகிறது.

கடைசியில், கீதன் – வர்ஷா இணைந்தார்களா? அவர்களது காதல் என்னவானது? காசிராஜான் தனது மாமாவை பழிவாங்கினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கீதன் கிராமத்து மாணவர் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். அடி வாங்கிக்கொண்டே வர்ஷா சொன்னதை நினைத்து சிரிக்கும்போது அவரது நடிப்பு பாராட்டும்படியாக இருக்கிறது.

நஸ்ரியாவின் நகலாக இருக்கும் வர்ஷா, மேக்கப்பை குறைத்து கிராமத்து பெண்ணுக்கு ஏற்றவாறு மாறி நடித்திருப்பது சிறப்பு. கண்களை உருட்டி சிரிக்கும்போது அழகாக இருக்கிறார். இனி தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கலாம். கீதனின் அம்மாவாக வந்து கருவாடு விற்கும் வேடத்தில் விஜி சந்திரசேகர் கிராமத்து அம்மாக்களை பிரதிபலிக்கிறார்.

வர்ஷாவின் தாய்மாமா காசிராஜன், ஊமையனாக வரும் நிரஞ்சன், கீதனின் நண்பர்களான மகேந்திரன், வின்செண்ட் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எளிமையான ஒரு கதையை கிராமத்து பின்னணியில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன். எனினும் கதைக்கு ஏற்றவாறு திரைக்கதையை முழுமைப்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கதையில் தொடர்ச்சி இல்லாமல், ஒவ்வொரு காட்சிக்குண்டான இடைவெளியும் நீளமானதாக இருக்கிறது. காதல், பாசம் என ஒருசில இடங்களில் உருக வைத்தாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் கதாபாத்திரங்களை நல்லவே வேலை வாங்கியிருக்கிறார். கீதன், வர்ஷா, விஜி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்ளுமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநரை பாராட்டலாம். ஆண்கள் ஒருதலைக்காதலால் பெண்கள் பின்னால் சுற்றுவதால் அவர்களுக்கு வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை தெளிவாக சொன்ன விதத்தில் சந்தோஷ் தியாகராஜனுக்கு பாராட்டுகள்.

ஜோஸ் பிராங்ளினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். திருஞானசம்பந்தத்தின் ஒளிப்பதிவு பட்டுக்கோட்டை கிராமங்களை அழகாக பதிவு செய்திருக்கிறது.

மொத்தத்தில் `சீமத்துரை’ உருக வைத்திருக்கலாம்.

error: Content is protected !!