மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 வருஷம் ஜெயில்!

மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 வருஷம் ஜெயில்!

இந்தியாவில் வெளியாகும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் (சாதாரண மொபைல் போன்களிலும் இந்த எண் இருக்கும்) பிரத்யேக அடையாள எண்ணாக கருதப்படும் ஐஎம்இஐ எண் (IMEI) கட்டாயம் இருக்கும். இந்த எண்ணானது ஸ்மாட்போனின் உள்புறம் மற்றும் ஸ்மார்ட்போன் பேக்கிங்க் பாக்ஸின் வெளிப்புறம் அச்சிடப்பட்டிருக்கும். இந்த எண் இல்லை என்றால் அவை நிச்சயமாக போலி ஸ்மார்ட்போன்களே. அதனால் இந்த ஐஎம்இஐ நம்பர் இல்லாத ஸ்மார்ட்போன்களை ஒருபோதும் வாங்க வேண்டாம் என்று முன்னரே அரசு அறிவிப்பே வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

அதாவது ஒவ்வொரு செல்போனுக்கும் 15 இலக்கங்கள் கொண்ட தனிப்பட்ட ஐஎம்இஐ அடையாள எண் உள்ளது. இது பேட்டரியை பொருத்தும் இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அடையாள எண், சிம் கார்டு ஸ்லாட் உடன் தொடர்புடையது. ஒரே மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தினால் அந்த மொபைல் போன் இரண்டு ஐஎம்இஐ எண்களைக் கொண்டிருக்கும். மொபைல் போனில் *#06# என்ற குறியீடுகளை அழுத்தினால் திரையில் ஐஎம்இஐ எண் தெரியும்.திருடுபோன மொபைல் போன்களின் ஐஎம்இஐ எண்களை வைத்து அவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.ஆனால் திருடப்பட்ட மொபைல் போன்களில் சாப்ட்வேர் மூலம் ஐஎம்இஐ எண்ணை மாற்றி போலி ஐஎம்இஐ எண்ணை பொருத்தி சந்தையில் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் காணாமல்போன மொபைல் போன்களை கண்டுபிடிப்பது பெரும் சிரமமாக உள்ளது.

அண்மையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை நடத்திய ஓர் ஆய்வில் ஒரே ஐஎம்இஐ எண்ணில் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டை தடுக்க ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

மேலும் மொபைல் போன் திருடு போனால் அதனை முற்றிலும் செயலிழக்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் மற்றும் புனேவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இணைந்து சிஇஐஆர் எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் ஒவ்வொரு மொபைல் போனின் ஐஎம்இஐ தகவல்களுடன் இணைக்கப்படும். இதன்மூலம் காணாமல்போன மொபைல் போனை முற்றிலுமாக செயலிழக்க செய்ய முடியும். அந்த போனில் சிம் கார்டு இல்லாவிட்டாலும் அதனை முடக்க முடியும். இதன்மூலம் மொபைல்போன் திருட்டுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!