நேஷனல் ஹைவேஸ்களில் ஸ்பீட் பிரேக்கர் எதுக்கு? ரிமூவ் இட்ஸ்! – மத்திய அரசு ஆர்டர்
நேஷனல் ஹைவேஸ்களில் உள்ள வேக தடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கும், தேசிய நெடுஞ் சாலை ஆணையத்துக்கும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் வேகதடை காரணமாக விபத்துக்குள்ளானவர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மோசமான சாலை காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 672 ஆக உள்ளது. இதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேக தடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் பொதுப்பணித்துறை அமைச்சகத்துக்கும் இந்தக் கடிதத்தின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. எல்லை சாலை அமைப்புக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடுத்த புதன் கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பஞ்சாயத்துகள் தங்கள் பகுதி மக்கள் சாலையை கடப்பதற் காக வேக தடை அமைத்துள்ளனர். வாகனங்கள் எந்த தடையும் இன்றி செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய நெடுஞ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வேக தடை அமைப்பது விரும்பத்தகாத ஒன்றாகும். மக்கள் சாலையை கடக்க மேம்பாலங்கள் அல்லது சுரங்க பாதைகள் அமைக்கப்பட வேண்டும். இதே போல் வளைவான பகுதிகள், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் வாகனங்களின் வேகத்தை குறைக்க சாலைகளில் ஒன்றன்பின் ஒன்றாக சிறிய வேக தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான விதிமுறைகளை லோக்கல் அமைப்பினர் சரியாக பின்பற்றுவதில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முன் அனுமதி பெற்றபிறகே இது போன்ற வேகதடுப்பு களை அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.