மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்துக்கே சென்று சிகிச்சை!

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்துக்கே சென்று சிகிச்சை!

மாவட்டத் தலைநகரங்களில் 6 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பயன்பெறும் குழந்தைகளுக்கும் அவர்களின் துணையாளர்களுக்கும் போக்குவரத்து பயணச் சலுகை வழங்கப்பட்டாலும், கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் இம்மையங்களுக்கு தொடர்ந்து வருவதில் சிக்கல் உள்ளது. இதனால், இம்மையங்களின் முழு பயனையும் அவர்களால் பெற இயலவில்லை.
jaya 17a
எனவே, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 32 நகரும் சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் வாகனங்கள் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்துக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.4.49 கோடி செலவில் 31 நகரும் சிகிச்சைப்பிரிவு வாகனங்களின் சேவையை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 2 ஓட்டுநர்களிடம் வாகனத்தின் சாவிகளை வழங்கினார்.

இந்த வாகனங்கள் மூலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பணியாற்றும் முடநீக்கு வல்லுநர்கள் மற்றும் பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர்கள், மாற்றுத்திறனாளி குழ்நதைகளின் இருப்பிடங்களுக்கே சென்று சிகிச்சை அளிப்பர். இயன்முறை சிகிச்சை கருவிகளுடன் செயல்திறன் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பிறந்த குழந்தைகளை பரிசோதனை செய்தல், ஆரம்பநிலையில் குறைகளை கண்டறிதல், உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு செய்தல், பயிற்சி அளித்தல், விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் போன்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளும் விதத்தில் சிறப்பு வாகனத்தின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், குறுந்தகடுகள், தகவல் கையேடுகள் போன்றவை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!