செய்யாதுரை & கோவிடம் நடத்தப்பட்ட வந்த ஐ டி ரெய்டு நிறைவு!

செய்யாதுரை & கோவிடம் நடத்தப்பட்ட வந்த ஐ டி ரெய்டு நிறைவு!

கடந்த இரண்டு நாட்களாக தமிழக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான செய்யாதுரை மற்றும் அவரிடம் பணிபுரிந்த ஊழியர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வந்த சோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் எஸ்.பி.கே கட்டுமான நிறுவன உரிமையாளரும், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருமான செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று (ஜுலை-16) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள செய்யாதுரை, அவரது உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை என 30-க்கும் அதிகமான இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தப்பட்டது.

இரண்டாவது நாளாக தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் பணமாக ரூ.168 கோடியும், 103 கிலோ தங்கமும், பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.செய்யாதுரை சொந்தமான நிறுவனத்தில் இயக்குனரராக இருக்கும் சுப்ரமணியம் பழனிசாமியின் மகள் (திவ்யா) தான் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் முத்து குமாரின் மனைவி ஆவார் என்பது கூடுதல் தகவல்.

இதனிடையே இந்த ரெய்டு குறித்து நமது ஸ்பெஷல் ரிப்போர்ட்டர் அளித்த தகவல் இதோ:

முந்தா நேத்து இரவு கிடைத்த அதிகாரபூர்வ உத்தரவை அடுத்து, எர்லி மார்னிங் சென்னை, மதுரை, விருதுநகர் என்று செய்யாதுரையின் குடும்பத்தை மட்டுமே குறிவைத்துக் களமிறங்கினர் வருமான வரித் துறை அதிகாரிகள். அந்த வகையில் சென்னையில் இருக்கும் செய்யாதுரையின் மகன் நாகராஜன் வீட்டுக்கும் நேற்று காலை 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் டீம் சென்றது.

வீட்டுக்குள் சென்றதும் முகத்தில் ஒரு சிறிய பதற்ற ரேகை கூட தென்படாமல் ஸ்மைல் செய்திருக்கிறார் நாகராஜன். மிக கேஷுவலாக, ‘வாங்க… வாங்க’ என்று நாகராஜன் வரவேற்க அதிகாரிகள் திகைத்தனர்.

‘’என்ன சார்… நாங்க வர்றது முன்னாலயே உங்களுக்குத் தெரியுமா? வி ஆர் இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட்’ என்று சில அதிகாரிகள் நாகராஜனிடம் கேட்டே விட்டனர்.

’’நீங்க வர்றது எனக்கு எப்படி சார் தெரியும். வீட்டுக்கு வந்திருக்கிங்களேனு உங்கள உபசரிச்சேன்’’ என்று நாகராஜ் பதில் தர, அடுத்த சில நிமிடங்களில் வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையாய் பிரித்து மேய ஆரம்பித்தனர் அதிகாரிகள்.

அரை மணி நேரம் ஓடியது. நாகராஜன் பதற்றமில்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். ஆனால் தேடச் சென்ற அதிகாரிகளுக்கு லேசான பதற்றம். ஒவ்வொரு அறையாய் தேடிய அதிகாரிகள் மீண்டும் ஒன்று கூடினர்.

“என்ன சார்…நாம வந்த டாக்சி பில் கொடுக்கக் கூட ஒண்ணும் தேறலையே…” என்று அதிகாரிகள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் ’சார்….’ என்ற குரல் ஓர் அறையில் இருந்து கேட்டது. அது அந்த பத்து பேரில் ஒரு அதிகாரியின் குரல்தான்.

கிடுகிடுவென அந்த அறைக்குள் அனைவரும் போக, அங்கே ஒரு டேபிள் டிராவில் எக்கச்சக்கான சாவிகள். கார் சாவிகள், அறை சாவிகள், லாக்கர் சாவிகள் என்று விதம் விதமான சாவிகள் அங்கே இருந்தன. அப்போதுதான் அதிகாரிகளின் கண்களில் வெளிச்சம் வந்தது.

“இந்த சாவிகள்லாம் என்ன சார்… என்ன இத்தனை சாவி வச்சிருக்கீங்க?’’ என்று அதிகாரிகள் கேட்க, நாகராஜனின் முகத்தில் அப்போதுதான் பதற்ற மின்னல் லேசாக வெட்டியது. அந்த முகக் குறிப்பிலேயே சில விஷயங்களை உணர்ந்த அதிகாரிகள், அதுவரை மேற்கொண்ட விசாரணை அணுகுமுறையை கொஞ்சம் டைட் செய்ய ஆரம்பித்தனர்.

‘’என்ன மிஸ்டர் நாகராஜன்… என்ன இத்தனை சாவிகள்? இதெல்லாம் எந்த பூட்டுகளோட சாவிகள்?’’ என்று கேட்டனர்.

”அதெல்லாம் கம்பெனி கார், வீடுகளோட சாவிகள் சார்…’’ என்று நாகராஜன் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த டிராவில் இருந்து ஒரு நீண்ட லிஸ்டும் கையில் கிடைக்க நாகராஜன் தலையில் கை வைத்துவிட்டார்.

அந்த பேப்பரில் சென்னையில் பல இடங்களைக் குறிப்பிட்டு ஒவ்வொரு இடத்திலும் 100, 200, 100 கேஜி என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பேப்பரைப் பார்த்ததும் ரெய்டு கேம் வருமான வரித்துறை அதிகாரிகளின் பக்கத்துக்கு வந்தது.

அடுத்தடுத்த கேள்விகளால் துளைக்கப்பட்டார் நாகராஜன். அதன் விளைவாக அங்கிருந்தே ஒரு டீம் கிளம்பி, நாகராஜனின் டிரைவர் வீட்டுக்குச் சென்றது.

டிரைவரிடம், ‘என்னய்யா… பணம், நகையெல்லாம் எங்கங்க வைக்கச் சொன்னாரு உங்க ஓனரு?’’ என்று ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் டிரைவர் கொஞ்சம் கெத்து காட்டி, ‘எனக்குத் தெரியாது சார் அதெல்லாம்’’ என்று சொல்லியிருக்கிறார்.

அடுத்த நிமிடம் அந்த டிரைவரின் பேண்ட் சட்டையை உருவி ஜட்டியோடு உட்காரவைத்து விசாரணையை வேறு திசைக்கு மாற்றினர் வருமான வரித்துறை அதிகாரிகள். அதன் பிறகுதான் சென்னை மாநகரின் சில இடங்கள் தொடங்கி பெரம்பூர் வரை கொட்டியிருக்கிறார் டிரைவர்.

டிரைவர் சொன்ன வீடுகள் எல்லாமே செய்யாதுரை, நாகராஜன் ஆகியோரின் நண்பர் களுடையது. இன்னும் சில பேர் இவர்களிடம் கடன் வாங்கியவர்கள், இன்னும் சிலர் தங்கள் சொத்துகளை செய்யாதுரையிடம் விற்பதற்காக பேசி வந்தவர்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு ரெய்டுக்கு முன் தினமே போன் பண்ணி, ‘கொஞ்சம் பிரச்னை…. அதனால சில பேப்பர்களை வச்சி காரை மட்டும் உங்க வீட்ல பார்க் பண்ணிக்கிறோம். எல்லாம் முடிஞ்சதும் எடுத்துக்குறோம்’’ என்று கேட்டிருக்கிறார்கள். நாகராஜனிடம் இருந்து காரியம் ஆகவேண்டிய அவசியம் இருப்பதால் அவர்களும் அதனால் என்ன என்று தலையாட்டியிருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் நாகராஜனுக்கு அறிமுகமான பலரது வீடுகளில் நிறுத்தப் பட்டிருந்த கார்களில் இருந்து கட்டுகட்டாக பணம், நாகராஜனின் நண்பர் ஒருவரின் வீட்டில் பூட்டப்பட்ட பாத் ரூமில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகள் என்று கைப்பற்றி யிருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

கார்கள் நிறுத்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களிடமும் விசாரணையைத் தொடங்க திட்டமிட்ட நிலையில், ‘’ அது எல்லாமே என் பணம்தான். நானே அதற்கு வரி கட்டுகிறேன்” என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார் நாகராஜன்.

“ரெய்டுக்கு வரப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்துதான் நாகராஜன் தனது பணத்தையும், நகைகளையும், ஆவணங்களையும் இவ்வளவு பத்திரமாக கார்களில் அடைத்து ஆங்காங்கே பார்க் பண்ணச் சொல்லியிருக்கிறார். முன்கூட்டியே தகவல் கிடைக்காமல் இப்படி கன கச்சிதமாக திட்டமிட முடியாது. அவ்வாறு நாகராஜனுக்கு தகவல் எங்கிருந்து கிடைத்திருக்கும்? இந்த ரெய்டின் மூலம் இறுதியாக பாதிக்கப்படப் போகும் அந்த மேலிடம்தான் எப்படியோ மோப்பம் பிடித்து, ‘காப்பாத்திக்கப்பா’ என்று சொல்லியிருக்க வேண்டும்’’ என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில்.

”வருமான வரித்துறை ரெய்டில் இருந்து தப்பிக்க அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் வீட்டுக்கு கார் அனுப்பி பதுக்கியது பக்கா டெக்னிக்தான். ஆனால், மண்டையை மறைத்தும் கொண்டையை மறைக்கத் தெரியாதவராக அத்தனை சாவிகளையும் தன் வீட்டில் வைத்திருந்தாரே நாகராஜன். அந்த சாவிக் கொத்துகளுக்கு நன்றி’’ என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் ரெய்டுக்கு போன அதிகாரிகள்.

error: Content is protected !!