நாட்டிலுள்ள 26 சதவீத முதல்வர்கள் மீது கொலை, மோசடி உள்ளிட்ட வழக்குகள் பெண்டிங்!

நாட்டிலுள்ள 26 சதவீத முதல்வர்கள் மீது கொலை, மோசடி உள்ளிட்ட வழக்குகள் பெண்டிங்!

நம் நாட்டில் உள்ள முதலமைச்சர்களில் அதிக சொத்து வைத்திருப்பவர்களில் ஆந்திர முதல மைச்சர் சந்திர பாபு நாயுடு முதலிடத்தைப் பிடித்துள்ளார். திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் கடைசி இடத்தில் உள்ளார். இந்த லிஸ்ட்டில் 7 கோடியே 80 லட்சம் ரூபாய் சொத்துடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12 -வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, பல்வேறு மாநில முதல்வர்களின் பின்னணி குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.

இதன்படி, ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு 177 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு 129 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்திலும், 48 கோடி ரூபாய் சொத்துக்களுடன் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் 3 -வது இடத்திலும் உள்ளார்.

நான்காவது இடத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவும், 5 ஆவது இடத்தில் மேகாலயா முதலமைச்சர் முகுல் சங்மாவும் உள்ளனர்.

இந்த லிஸ்ட்டில் 7 கோடியே 80 லட்சம் ரூபாய் சொத்துடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12 -வது இடத்தைப் பிடித்துள்ளார்.

திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் 26 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன் கடைசி இடத்தில் உள்ளார். இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வந்த சொத்து!மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் இவருடைய மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா, ஓய்வூதிய பலன்களாக பெற்ற வகையில் நிலையான வைப்புத் தொகையாக 23 லட்சத்து 58 ஆயிரத்து 380 ரூபாய் வைத்திருக்கிறார். கையிருப்பு தங்கம் 20 கிராம். இதன் மதிப்பு, ரூபாய் 72, 000. கையிருப்பு ரொக்கம் 22 ஆயிரத்து 15 ரூபாய் ஆக மொத்த மதிப்பு 24 லட்சத்து 52 ஆயிரத்து 395 ரூபாய்.

நாட்டிலேயே மிக மிக குறைவாக சம்பளம் வழங்கப்படுவது திரிபுராவில்தான். மாதச் சம்பளம் 9,200 ரூபாய். இதை அப்படியே கட்சியிடம் கொடுத்து விடுவார் மாணிக் சர்க்கார். கட்சிக்கு தன் உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு, கட்சியிலிருந்து வழங்கப்படும் உபகாரச் சம்பளம் மட்டுமே இவருக்கு உண்டு. அந்த வகையில் மாணிக் சர்க்காருக்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

இதுபோலேவே மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தத்தில் 26 சதவீத முதல்வர்கள் மீது கொலை, மோசடி உள்ளிட்ட மிக கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கல்வியறிவைப் பொறுத்தவரை 10 சதவீத முதல்வர்கள் 12-ம் வகுப்பு படித்துள்ளனர். 39 சதவீதம் பேர் பட்டதாரிகளாகவும், 32 சதவீதம் பேர் இன்ஜினியரிங் உள்ளிட்ட புரபஷனல் கல்வி பெற்ற பட்டதாரிகளாக உள்ளனர். 16 சதவீதம் பேர் முதுநிலை பட்டதாரிகளாகவும், 3 சதவீதம் பேர் பிஎச்டி முடித்தவர்களாக உள்ளனர் என்றும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

error: Content is protected !!