தியேட்டர்களில் 100% இருக்கை அனுமதி கூடாது! – மத்திய அரசு கண்டிப்பு!

தியேட்டர்களில் 100% இருக்கை அனுமதி  கூடாது! – மத்திய அரசு கண்டிப்பு!

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது விதிமீறல் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு விதிகளுக்கு ஏற்ப புதிய உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதன்பின்னர், மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அன்றைய தினம் தமிழகத்தில் திரையரங்குகளை இயக்க அனுமதியளிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை பலமுறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதற்கிடையே பொங்கல் ரிலீசை முன்னிட்டு 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!