March 25, 2023

தமிழகத்தில் 3வது அணி: கமல் தகவல்!

‘மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் நாம் தனியே நிற்போம் என அறிவித்தேன், தனியே நிற்போம் என்றால் நான் தனித்து அல்ல; நாம் நிற்போம், மக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால் கணிப்புகளை தாண்டி ஆதரவு உள்ளது, மக்கள் என் கையை பிடித்து நாடி பார்த்தில் புத்துயிர் இருப்பதால் நம்பிக்கையுடன் அனுப்பியுள்ளனர், எதிர்காலத்தை பற்றி கனவு காணும் பலரின் நினைவாக என்னை ஆசிர்வதித்து அனுப்பியுள்ளனர்’ என்று கமல் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பேசிய அவர், பல இடங்களில் கொடி ஏறிக் கொண்டிருப்பதாகவும், அதை எங்கே ஏற்ற வேண்டும் என்ற இலக்கு மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார். மேலும் கடந்த ஓர் ஆண்டில் மக்கள் நீதி மய்யக் கட்சி வளர்ந்திருப்பதாக தெரிவித்தார். மக்களுடனான தொடர்பை தாம் அதிகப்படுத்தி இருப்பதாகவும் மக்கள் தன்னை ஆசிர்வதித்து அனுப்பியிருப்பதாகவும் கமல்ஹாசன் கூறினார்.

இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா திருவாரூரில் நடைபெற்றது. அப்போது கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, அதிமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பாமக தற்போது அதே அதிமுகவில் இணைந்தது குறித்து கமல்ஹாசன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.101 சதவீதம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி வரும் 24 ஆம் தேதிமுதல் தொடங்கப்படும் என்றார்.அதில் வேட்பாளர் தேர்வில் வயது கல்வித் தகுதி, ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டும் என்றும் படித்த இளைஞர்களுக்கு முதல் மரியாதை தரப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய கமலிடம் அதிமுகவின் மெகா கூட்டணி குறித்து கூறியதாவது. ‘ மெகா கூட்டணி என்பது மக்கள் முடிவு பண்ண வேண்டியது. முன்பு ஒரு கட்சியை விமர்சித்து புத்தகத்தை யெல்லாம் வெளியிட்ட கட்சி தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் இந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் ‘என்றார். மேலும் மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி, தமிழகத்தில் 3 வது அணி அமைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.