வடகொரிய அதிபரை மீட் பண்ணும் இடம், தேதி! – ட்ரம்ப் அறிவிப்பு
பலத்த எதிர்பார்ப்பை எற்படுத்தி உள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவலை டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வடகொரியா தொடர்ந்து பல்வேறு அணு ஆயுதங்களை சோதனை செய்து வந்ததை தொடர்ந்து அந்நாடு மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதித்தது. அதுமட்டுமன்றி அமெரிக்காவும் பல்வேறு நெருக்கடிகளை வடகொரியாவிற்கு ஏற்படுத்தி வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் ஒருவரை ஒருவர் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனால் மூன்றாம் உலகப்போர் மூண்டு விடுமோ என்று உலக மக்கள் பயந்து கொண்டிருந்தனர்.
சமீபத்தில் வடகொரியா மற்றும் தென்கொரியா நாட்டு அதிபர்கள் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு மூலம் பகைமை உணர்வு கட்டுக்குள் வந்தது. இதைத் தொடர்ந்து, மோதல் போக்கை கைவிட்டு நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் அறிவித்தார். இதனால் டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு வெகுவிரைவில் நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிற ஜூன் மாதம் 12-ம் தேதி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சிங்கப்பூரில் நேரில் சந்திக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உலக அமைதிக்கான முக்கிய தருணமாக இந்த சந்திப்பை தாங்கள் இருவரும் சேர்ந்து மாற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.