ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ரயில் சேவை பற்றி புகார் தெரிவிக்கணுமா?
ரயில் பயணிகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு திட்டமான இணையதளம் மற்றும் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் ரயில் பயணத்தின் போது ஏற்படும் புகார்கள், ரெயில் சேவையை மேம்படுத்துவது தொடர்பான கருத்துகள் உள்ளிட்டவைகளை பதிவு செய்யும் திட்டத்தினை கடந்த 2–ந் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் தொடங்கிவைத்தார்.
இந்த புதிய இணையதளத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் பயணம் செய்யும் பெட்டியில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருப்பது, குடிநீர் பிரச்சினை, திருட்டு சம்பவங்கள், இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைகள், டிக்கெட் ரத்து செய்து பணம் கிடைக்காமல் போவது உள்பட 23 விதமான பிரச்சினைகள் குறித்து புகார் செய்யலாம். உதாரணமாக ரயில் பயணத்தின் போது வழங்கப்படும் உணவு சரியில்லை என்றால் உடனடியாக இந்த இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
இணையதளத்தில் உணவு தொடர்பான புகார் தேர்வை தேர்வு செய்யும்போது, உணவில் தரமின்மை? அளவு குறைபாடு? அதிக விலை? சுகாதாரமின்மை? ஒழுங்கின்மை? தாமத சேவை? தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு இல்லாதது? மற்றும் பிற தகவல்கள் என்ற தேர்வுகள் கிடைக்கப்பெறுகிறது. இதில் புகார் கொடுக்கப்படும் பிரிவின் கீழ் உள்ள தேர்வினை ‘கிளிக்’ செய்ய வேண்டும். பின்னர் பயணியின் பெயர், செல்போன் எண், முகவரி, மின்னஞ்சல் முகவரி, புகார் கூறப்படும் இடம் போன்றவற்றையும், புகார் தொடர்பான கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.
இதையடுத்து புகாரை பதிவு செய்த பிறகு, பதிவு செய்யப்பட்டதற்கான சிறப்பு பதிவெண் பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். இந்த பதிவெண்ணை அதே இணையதளத்தில் குறிப்பிட்டு, புகாரின் மேலான நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதைத்தவிர ரயில் சேவை மேம்படுத்துதல் தொடர்பான தங்களது மேலான கருத்துகளையும் பயணிகள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான அப்ளிகேஷனை www.coms.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பயணிகள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் செல்போன் மூலமாகவும் புகார்களை பதிவு செய்துகொள்ளலாம். மேலும், 9717680982 என்ற எண்ணிற்கும் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் பயணிகள் புகார் அளிக்கலாம்.