ரஜினி மகள் தொடங்கிய புதிய சமூகவலைத்தளம்!

ரஜினி மகள் தொடங்கிய புதிய சமூகவலைத்தளம்!

ப்போதெல்லாம் பல சமூக வலைதள செயலிகள் புழக்கத்தில் இருக்கின்றன. பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஷேர் சாட் அது., இது என்று ஏகப்பட்ட செயலிகளின் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், எழுத படிக்காத தெரியாதவர்களும் தங்களது தகவல்களை குரல் வழியாக  பிறருக்கு பரிமாறிக் கொளவதற்கான ஒரு எளிமையான சமூக வலைதள செயலியை ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குநர் மற்றும் தொழில்முனைவரான செளந்தர்யா விசாகன் அறிமுகப்படுத்தியுள்ளார். தொழில் வல்லுநர், தொழில்முனைவோர் மற்றும் உலகளாவிய வணிகத் தலைவரான சன்னி போகாலாவுடன் இணைந்து செளந்தர்யா உருவாக்கிய இந்த குரல் அடிப்படையிலான ‘ஹுட்’ (Hoote) என்ற இந்த செயலி, நேற்று (அக்டோபர் 25) சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரஜினியின் குரல் பதிவோடு அறிமுகமான ‘ஹுட்’ (Hoote) செயலி, 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளிலும் செயல்படுகின்றன. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் தங்கள் தனித்துவமான சொந்தக் குரலின் மூலம் தங்களது தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். ஹுட் செயலியைப் பயன்படுத்த 60 வினாடிகள் வரை ஆடியோ செய்தியைப் பதிவு செய்து, உலகிற்குப் பகிரலாம். மேலும், கஸ்ட்டம் லைப்ரரி-யில் (Custom Library) உள்ள ஒரு பின்னணி இசையைச் சேர்த்து பயனர்களின் குரலை பின்னணி இசையோடு சேத்து வழங்கும் வசதியும் ஹுட் செயலியில் உள்ளது. அதேபோல், ஒரு செய்தியின் காட்சி நுணுக்கங்களை முழுமையாக வெளிப்படுத்த, பயனர்கள் தங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை இணைக்கும் வசதியும் இதில் உள்ளது.

இந்த செயலியை உருவாக்கியது குறித்து செளந்தர்யா விசாகன், “எனது அப்பா ரஜினிகாந்த் அவர்களுடைய அனைத்து விசயங்களிலும் நான் நெருக்கமாக இருப்பேன். அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் தகவல்கள் மற்றும் செய்திகள் குறித்தும் நான் அறிவேன். அதற்காக அவர் பலரிடம் கருத்து கேட்பார். பிறகு அதை எனக்கு அனுப்பி வைப்பார். அப்பா, பல மொழிகளை நன்கு படிப்பார், பேசுவார், ஆனால், கோர்வையாக எழுத தெரியாது. குறிப்பாக தமிழ் மொழியை அப்பா படிப்பார், ஆனால் கோர்வையாக எழுத மாட்டார். அதனால், தமிழில் எதாவது தகவலை வெளியிடும் போது ஒன்றுக்கு பல முறை ஆலோசனை கேட்பார். அப்போது தான் எனக்கு தோன்றியது, அவருடைய தகவலை ஏன் குரல் மூலம் வெளிப்படுத்த கூடாது என்று. அப்பா போன்று எத்தனை பேர் குறிப்பிட்ட மொழியை எழுத முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும், எழுதுவதற்கு நேரம் ஆவதோடு, அதில் பிழை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், குரல் என்றால், நாம் சொல்ல நினைக்கும் கருத்தை, நாமே உடனடியாக தெரியப்படுத்தலாம், என்று தோன்றியது. அதன் காரணமாகவே, இந்த ஹுட் செயலியை உருவாக்கும் முயற்சியில் நான் இறங்கினேன். இன்று இந்த செயலியை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

ஹுட் செயலி குறித்து சன்னி போகாலா கூறுகையில், “தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கான முயற்சி தான் ஹுட். செளந்தர்யா இந்த திட்டம் குறித்து கூறிய போது, இது சிறப்பான திட்டம் என தோன்றியது. உடனே அவருடன் இணைந்து பணியாற்றி ஹுட் செயலியை உருவாக்கினோம். இதில், அனைத்து மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன. சமூக வலைதள செயலிகளுக்கு இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்திருக்கிறோம். மொழித் தடைகளை உடைத்தெரியும் ஒரு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள ஹுட், பிரபலங்கள், புகழ்பெற்ற தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும், தங்களது குரலை உலகறியச் செய்யவும் ஒரு முக்கியமான தளமாக ஹுட் உருவெடுக்கும்.” என்றார்.

ஹுட் என்பது Cloud-Native தொழில்நுட்பத்திலான மொபைலில் பயன்படுத்தத்தகுந்த, பிராந்திய மொழிகளுக்கான ஒரு தளமாகும். இது உலககெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் குரல்களைப் பயன்படுத்தவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கும் வகையில் நவீன சமூக ஊடக அனுபவத்தை வழங்குகிறது. தாங்கள் தவறாக மதிப்படப்படுவோம் என்ற எந்த பயமும் இன்றி, ஒரு ஆரோக்கியமான சமூகக் குழுவாக பயனர்கள் இயங்க ஹுட் ஊக்குவிக்கிறது.

error: Content is protected !!