யானைகளை ஊர்வலங்களில் பயன்படுத்தும் விவகாரம்! -சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
அந்தக்காலத்தில் குழந்தைகளை அட்சராப்பியாசம் செய்து வைக்கும் போது யானை மேல் வைத்து ஊர்வலம் போய் ,அப்புறம் வீட்டில் நல்ல வாத்தியார் வைத்து அட்சராப்பியாசம் நடைபெறும். அத்துடன் மாப்பிள்ளை அழைப்பு, , பெரிய மனிதர்கள் வரவேற்பில் எல்லாம் யானை மாலையிட்டு வரவேற்கும். கோவில் விழாக்களில் தீர்த்தவாரிக்கு, யானைமேல் ஸ்வாமி ஆற்றங்கரைக்குப் போவார். திருவிழாக்களில் யானை மேல் இறைவனுக்கு மாலை மரியாதைகள் வரும். இந்நிலையில் யானைகளை விற்பனை செய்தல், பரிசுபொருளாக வழங்குதல் மற்றும் மதம் சார்ந்த ஊர்வலங்களில் பயன்படுத்த தடை கோரும் மனு மீது மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு உள்ளிட்ட ஆறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் யானைகள் நலன் குறித்து பொது நல மனுஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”மத அமைப்புகள் மற்றும் தனி நபர்களிடம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் , இவைகளை மதம் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் ஊர்வலங்கள், பொதுவிழாக்களில் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும்.
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஷியாம் திவான் ஆஜராகி வாதாடினார். கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சார்பாக அந்தந்த மாநில அரசின் வக்கீல்கள் ஆஜரானார்கள். தமிழக அரசு சார்பாக வக்கீல் பி.பாலாஜி ஆஜரானார்.
விசாரணை தொடங்கியதும், இந்த வழக்கு தொடர்பாக 8 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கோரி மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.