முக பளபளக்க வேண்டுமா?முதுமையை துரத்த வேண்டுமா? உங்களுக்கு உதவும் தண்ணீர்!

முக பளபளக்க வேண்டுமா?முதுமையை துரத்த வேண்டுமா?  உங்களுக்கு உதவும் தண்ணீர்!

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்.
எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு உறுப்புகள் பாதுகாப்பட்டு நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.
nov 9 - health Water-and-the-body.
எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர்.

அதிலும் நம் உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறைந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

வயதாவதை முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். பளபளப்பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.

முகப் பளபளப்பு

அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம்.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.

வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர்.

திரும்பிய இளமை

செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்.

சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

தண்ணீரின் அவசியம்

உஷ்ணபிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர். எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் பரிந்துரைக்கின்றனர்.

நான்கு லிட்டர் தண்ணீர்

நான்கு லிட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லிட்டரும் குடிக்கவேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,

சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள். எப்போதாவது சுடுநீர் தண்ணீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது சரி, இப்போது உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பார்ப்போம்.

* உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.

* வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

* சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால் உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

* அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால் உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும் அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.

* உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.

* சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல.

மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

* உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில் செதிலான சருமத்தை ஏற்படுத்தி தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.

* உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு சருமத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.

* உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்கமும் உருவாகும். எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.

* 70 சதவிகிதம் தண்ணீரால் ஆன தசைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.

* இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும்.

* ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின் உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.

* உடலில் நீர் வறட்சி இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

* மலச்சிக்கல் ஏற்படுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.

* உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால் தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.

* உடலில் நீர் வறட்சி இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால் தண்ணீர் அதிகம் பருகுங்கள்.

ஸ்ரீவித்யா

error: Content is protected !!