முகம் காட்டி பணம் எடுக்கும் ஏ.டி.எம்; சீனாவில் அறிமுகம்! – வீடியோ
‘ஆட்டோமேடட் டெல்லர் மிஷின்’ என்ற, ஏ.டி.எம்., தானியங்கி பணம் வழங்கும் இயந்திர மையங்கள் நம் நாட்டில், சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகின. இது, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. துவக்கத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த இந்த மையங்கள், தற்போது, பரவலாக அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும், 1.76 லட்சத்துக்கும் அதிகமான ஏ.டி.எம்.,கள், பல்வேறு வங்கிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் பின் நம்பர் போட்டு பணம் எடுக்கும் முறையை அடுத்து கைரேகை பதிவு மூலம் பணம் எடுக்கும் ஏ.டி.எம். இயந்திரங்கள் சிலி, கொலம்பியா போன்ற நாடுகளில் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கிறது.
அதையும் தாண்டி ஏ.டி.எம்.களில் மோசடி மற்றும் திருட்டுகளை தடுக்க உலகிலேயே முதல்முறையாக முகத்தை பார்த்து பணம் எடுக்கும் Facial Recognition Technology உடன் கூடிய நவீன ஏ.டி.எம். இயந்திரத்தை சீனா உருவாக்கி உள்ளது. சின்குவா பல்கலைக்கழகம் மற்றும் செக்வான் டெக்னாலஜி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஏ.டி.எம்.-ஐ உருவாக்கியுள்ளனர்.
இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. ஆனால், அது போன்ற பயோமெட்ரிக் ஏ.டி.எம்.கள் அதிக செலவினம் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் வைக்கப்படவில்லை. இந்நிலையில், சீனாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு விரைவில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ செய்தி :
https://www.youtube.com/watch?v=OCc5rJZkE3A