மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது: மீன் விலை எகிரும்!
மீன் வளத்தை அதிகரிக்கும் வகையில், இன்று நள்ளிரவு முதல் மீன்பிடிக்க தடை விதிக்கும் முறை அமலாகிறது. மீன்பிடி தடைக்காலத்தில், தங்களுக்கு தரப்படும் நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும் என, மீனவர்கள் அரசை கோரி உள்ளனர்.மேலும் மீன்பிடி தடை காலம் தொடங்கிய பின் மீன்கள் வரத்து குறையக் கூடும். இதனால் மீன்விலை கணிசமாக உயரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட வங்க கடல் பகுதியில் ஏப்ரல், மே மாதங்கள் மீன்களின் இனவிருத்தி காலமாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த நாட்களில் மீன் உள்பட கடல் உயிரினங்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனவிருத்தி செய்கிறது.இதனால் மீன்வளத்தை பெருக்கும் வகையில் ஏப்ரல் 15–ந்தேதி முதல் 45 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்து வருகிறது.
இந்த தடை காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. இன்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது. ஏற்னவே மீன்பிடிக்க கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் இன்று கரை திரும்புவார்கள்.சென்னையில் 1300 விசைப் படகுகள் உள்பட தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது என்று தெரியவந்துள்ளது.
கடலுக்கு செல்லாத காலத்தில் மீனவர்கள் தங்கள் வலைகளையும், படகுகளையும் பராமரித்துக் கொள்வார்கள்.தற்போது மீன் வரத்து அதிகமாக இருந்ததால் மீன் விலை 30 சதவீதம் வரை குறைந்து இருந்தது. மீன்பிடி தடை காலம் தொடங்கிய பின் மீன்கள் வரத்து குறையக் கூடும். இதனால் மீன்விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.