மக்களவை துணை சபாநாயகராகிறார் தம்பிதுரை!
பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க.வின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்தார்.அநேகமாக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த கட்சியைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.இன்று செவ்வாய்க்கிழமை நடந்த துணை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கலில் தம்பிதுரையைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில் அவரே இன்றைய வாக்கெடுப்பில் துணை சபாநாயகராக தேர்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
பாராளுமன்றத்தில் தற்போது 44 எம்.பி.க்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. ஆனால் காங்கிரசுக்கு அந்த பதவியை கொடுக்க விரும்பாத பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கு அந்த பதவியை கொடுக்க விருப்பம் தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வுக்கு தற்போது பாராளுமன்ற மக்களவையில் 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய கட்சியாகத் திகழும் அ.தி.மு.க.வின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை ஆவார். எனவே அவரை துணை சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க. தேர்வு செய்திருந்தது.
தற்போது துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தம்பித்துரை ஏற்கனவே 1985ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை துணை சபாநாயகராக பணியாற்றி அனுபவம் பெற்றவராவார். மேலும் இவர் ஓராண்டு மத்திய அமைச்சராகவும் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
.