மகளிருக்கான ‘மக்கள் ஆட்டோ’ வில், 90 டிகிரி சுழலக்கூடிய, டேப்லெட் !
மாநகரில் ஆட்டோக்களில் மீட்டர் போட்டு இயக்குவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், பாடல், படம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே, பாதுகாப்பான பயணத்தை தரும் வகையில், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட ஆட்டோக்களை, மாநகரில் அறிமுகப்படுத்தியுள்ளது மக்கள் ஆட்டோ நிறுவனம். நம்ம ஆட்டோவை அறிமுகப்படுத்திய நிறுவனத்தை சேர்ந்த மன்சூர் அலிகான் என்பவர், தனி நிறுவனம் துவங்கி, மக்கள் ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது குறித்து, மன்சூர் அலிகான் ”மக்கள் ஆட்டோவில், 90 டிகிரி சுழலக்கூடிய, டேப்லெட் கம்ப்யூட்டர் இணைத்துள்ளோம். இந்த கம்ப்யூட்டர் மானிட்டரில், பதிவு செய்யப்பட்ட பாடல் நிகழ்ச்சிகளுடன், விளம்பரங்களும் காண்பிக்கவுள்ளோம். இதன் மூலம், ஆட்டோ பயணம் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாக இருக்கும்.மேலும், பயணிகளுக்கு பிரச்னை எதுவும் வந்தால், தொடுதிரையில், ‘ஹெல்ப்’ என்ற பொத்தானை அழுத்தினால், கட்டுபாட்டு அறைக்கு தகவல் செல்வதுடன், ஆட்டோவில் உள்ள டிரைவர், பயணிகளின் போட்டோக்கள் படம் பிடிக்கப்பட்டு விடும்.
உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் தொடர்பு கொள்வதுடன், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டு விடும்.அரசு நிர்ணயித்துள்ள கட்டணமே வசூலிக்கப்படும்; அதற்கான ரசீதும் வழங்கப்படும். பயணத்திற்கான கட்டணம், 50 ரூபாய்க்கு மேலாக இருக்கும் பட்சத்தில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்த வசதியுள்ளது. பெண்கள் மட்டுமே பயணிக்க பிரத்யேக வசதியாக, பெண்களே ஓட்டும், 25 ஆட்டோக்களை, முதல் கட்டமாக அறிமுகப்படுத்துகிறோம்.
‘ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்’ வசதியுள்ள எந்தவொரு மொபைல்போன் மூலமாக, தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மக்கள் ஆட்டோக்களை அழைக்க முடியும்.முதல் கட்டமாக, 100 ஆட்டோக்களிலும், மூன்று மாதத்திற்குள், 1,000 ஆட்டோக்களிலும், கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய மீட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இம்மாதத்திற்குள் ஆட்டோக்களை இயக்கத்திற்கு கொண்டு வரவுள்ளோம். இந்த புதிய தொழில்நுட்ப வசதிக்கான காப்புரிமை பெற்றுள்ளேன். ஒரு ஆட்டோவில், இந்த வசதியை ஏற்படுத்த, 9,000 ரூபாய் வரை செலவாகும்”என்று அவர் கூறினார்.
நன்றி: www.dinamalar.com/