ப, சிதம்பரம் ஜாமீன் நிபந்தனையை முதல் நாளே மீறிட்டார் – ஜவடேகர் குற்றச்சாட்டு!

ப, சிதம்பரம் ஜாமீன் நிபந்தனையை முதல் நாளே மீறிட்டார் – ஜவடேகர் குற்றச்சாட்டு!

ப.சிதம்பரம் நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும் போது, “ ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த முதல் நாளே ஜாமீன் நிபந்தனைகளை மீறியுள்ளார். வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது என்ற நிபந்தனையை ஜாமீனில் கூறியிருந்தது. ப.சிதம்பரம் சிறையிலிருந்து வெளிவந்த முதல் நாளிலேயே, எந்த பொது கருத்தும் தெரிவிக்க கூடாது என்ற நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார்” என்றார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று மாலை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, 106 நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க ப.சிதம்பரம் இன்று பாராளுமன்றத்திற்கு வந்தார். நாட்டில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் போராட்டம் நடத்தினர். பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்பிக்கள், வெங்காய விலையை குறையுங்கள் என்றும், ஏழைகளை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என்றும் கோஷமிட்டனர். அதில், ப.சிதம்பரமும் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம்,”நான் மீண்டும் இங்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் எதிர்கொண்டிருக்கும் பிரச்னையை பாஜக அரசால் இன்னும் யூகிக்கக் கூட முடிய வில்லை. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. எனும் வரி பயங்கரவாதம் ஆகிய மோசமான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களில் ஒன்றன் பின் ஒன்றாக பாஜக தவறு செய்து வருகிறது. பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பேசுவதே இல்லை. நல்ல நாள் வரும் என்று பாஜக வாக்குறுதியின் முடிவு இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சராக எனது நடவடிக்கையும், எனது மனசாட்சியும் முற்றிலும் தெளிவாக இருந்தன. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், என்னுடன் உரையாடிய தொழிலதிபர்கள் மற்றும் என்னைக் கவனித்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அதை நன்கு அறிவார்கள்.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 5 சதவீதத்துடன் நிறைவடைந்தால், நாம் அதிர்ஷ்டசாலிகள் தான். இதில், அரவிந்த் சுப்பிரமணியனின் எச்சரிக்கையை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த அரசாங்கத்தின் கீழ் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது சந்தேகத்திற்கிடமானது. உண்மையில் 5 சதவீதத்தை விட சுமார் 1.5% குறைவாக தான் ஜிடிபி வளர்ச்சி உள்ளது.

பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் வழக்கத்துக்கு மாறாக பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். நிதித்துறை நடவடிக்கைகளின் அனைத்து ஏற்ற, இறக்கங்களையும் சந்திக்க தனது அமைச்சர்களிடம் அதை விட்டுவிட்டார். பொருளாதார நிபுணர்கள் கூறியது போல், நமது அரசாங்கம் பொருளாதாரத்தை திறமையற்ற முறையில் வழிநடத்தி வருகிறது.

புதன்கிழமை இரவு 8 மணியளவில் நான் சிறையில் இருந்து வெளியேறி சுதந்திரக் காற்றை சுவாசித்தபோது, ​​எனது முதல் எண்ணமும் பிரார்த்தனையும் ஆகஸ்ட் மாதம் 04-ஆம் தேதி முதல் அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டு வரும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் 75 லட்சம் மக்கள் மீது தான் இருந்தது.

எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி கைது செய்யப்படும் அரசியல் தலைவர்கள் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். சுதந்திரம் பிரிக்க முடியாதது, நமது சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்காக போராட வேண்டும் .பாராளுமன்றத்தில் நான் கொடுக்கும் குரலை அரசால் அடக்க முடியாது” என்று கூறினார். பின்னர், மாநிலங்களவையில் நடைபெற்ற அவை நடவடிக்கைகளில் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.

இந்நிலையில்தான் ப.சிதம்பரம் நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும் போது, “ ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த முதல் நாளே ஜாமீன் நிபந்தனைகளை மீறியுள்ளார். வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது என்ற நிபந்தனையை ஜாமீனில் கூறியிருந்தது. ப.சிதம்பரம் சிறையிலிருந்து வெளிவந்த முதல் நாளிலேயே, எந்த பொது கருத்தும் தெரிவிக்க கூடாது என்ற நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார்” என்றார்.

error: Content is protected !!