பொது மக்கள் மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க உதவும் வெப்சைட்!
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று நேற்று டன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் http://mygov.nic.in/home_new என்னும் புதிய இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார் இந்த இணைய தளத்தை இன்று தொடக்கி வைத்து பேசிய பிரதமர், 60 நாள் ஆட்சி பற்றி கருத்துக்கூறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை அனைவரும் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது.இந்த அரசு பதவி ஏற்று இரண்டு மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, கங்கையை சுத்தம் செய்தல், ஆற்றல் மேம்பாடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை, கருத்துகளை கூறி அரசு நிர்வாகத்தில் பங்களிப்பு செய்ய உதவும் வகையில், ‘எனது அரசு’ (MyGov) என்ற பெயரிலான இணையதளத்தினை டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார். இந்த இணையதள முகவரி mygov.nic.in என்பதாகும்.
இந்த நிகழ்ச்சியில் பேசும்போது நரேந்திர மோடி,”பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் ஜனநாயகம் வெற்றி பெற்று விட முடியாது. கடந்த காலத்தில் மக்களுக்கும், அரசு நிர்வாக செயல்பாடுகளுக்கும் இடையே ஒரு பெருத்த இடைவெளி இருந்தது.வாய்ப்பு தேவை.கடந்த 60 நாட்களில், எனது ஆட்சியில், பொதுமக்களில் பலரும் இந்த நாட்டினை கட்டமைப்பதில், தங்களது நேரத்தையும், ஆற்றலையும் பயன்படுத்த விரும்புகின்றனர் என்பதை அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது. இதில் அவர்களுக்கு தேவைப்படும் ஒரே விஷயம், பிரகாசிக்கவும், பங்களிப்பை செய்யவும் ஒரு வாய்ப்பு தேவை என்பதுதான்.
எனது அரசு என்ற இந்த இணையதளம், தொழில்நுட்பத்துடன் கூடிய ஊடகமாக திகழும். அரசு நிர்வாகம் நல்ல முறையில் செயல்படுவதற்கு பொதுமக்கள் தங்கள் பங்களிப்பினை செய்வதற்கு இது வாய்ப்பினை வழங்கும்.இந்த பூர்வாங்க முயற்சியை மக்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த தளத்தினை பலப்படுத்தவும், மேம்படுத்தவும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
இந்த நாட்டினை முன்னோக்கி அழைத்துச் செல்லவும், ஏழை, எளிய மக்களின் அபிலாஷைகளை சந்திப்பதிலும், ஒவ்வொருவரும் அரசுடன் கைகோர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.அங்கீகாரம்
125 கோடி இந்தியர்களின் வலிமையையும், வல்லமையையும் நான் அங்கீகரித்திருக்கிறேன் என்ற காரணத்தால், இந்த திட்டம் பெருவெற்றி பெறும் என்றும் நம்புகிறேன்.பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை, கருத்துகளை, யோசனைகளை பெறுவதற்கு நான் காத்திருக்கிறேன்.”என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
‘மை கவ்’ என்னும் இந்த இணையதளத்தை தேசிய தகவல் மையம் (என்ஐசி) நிர்வகிக்கும்.
இந்த இணையதளத்தின் வாயிலாக பொதுமக்கள் அரசு திட்டங்கள் மீதான தங்கள் யோசனைகளை, சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளலாம். விவாதம் செய்யலாம். தற்போது 6 அம்சங்களில் விவாதங்கள் நடத்தவும், ஆலோசனைகள் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவை, கங்கை நதியை சுத்தம் செய்தல், பெண் குழந்தைகள் கல்வி, ஊழலற்ற இந்தியா, ஆற்றல்வாய்ந்த இந்தியா, டிஜிட்டல் இந்தியா, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகும்.இந்த இணையதளத்தில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே கருத்துகளை தெரிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.