பெண்ணின் திருமண வயது 21 – ஹைகோர்ட் மதுரை கிளை சிபாரிசு!

பெண்ணின் திருமண வயது 21 – ஹைகோர்ட் மதுரை கிளை சிபாரிசு!

திருச்சியைச் சேர்ந்த தியாகராஜன் ஹைகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவில், “திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் படித்துவரும் என் மகளை, மனோகரன் என்பவர் கடத்திச்சென்று விட்டார். இதுகுறித்து திருச்சி ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. எனவே, என் மகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டும்”என்று கூறியிருந்தார்.
WEDDINGGRAPH
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், ரவி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் மயில்வாகன ராஜேந்திரன் தனது வாதத்தில், “மனுதாரர் மகளிடமும், அவரை கடத்தியதாக கூறப்படும் மனோகரன் ஆகியோரிடம் ஜீயபுரம் போலீசார் விசாரித்தனர். இதில், மனுதாரரின் மகள் மேஜர் என்பது தெரியவந்தது. மேலும், அவர் மனோகரனுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால், அவர் விருப்பப்படி அனுப்பி வைக்கப்பட்டார்” என்றார். அத்துடன், மனுதாரரின் மகள் உரிய வயது வந்தவர் என்பதற்கான போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த பள்ளி மாற்று சான்றிதழை அரசு வக்கீல் கோர்ட்டில் ஒப்படைத்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் மதுசூதனன், ‘சட்டவிரோத காவலில் இருக்கும் தன் மகளை மீட்க மனுதாரருக்கு உரிமை உள்ளது. மனுதாரரின் மகள் மிரட்டப்பட்டதன் காரணமாக அவர் மனோகரனுடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே, மனுதாரரின் மகள் மிரட்டப்பட்டாரா என்பதை நேர்மையான முறையில் போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “திருமண வயதைப் பொறுத்தமட்டில் ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல இளம் பெண்கள் 18 வயதில் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர். இதுபோன்ற விவகாரங்களில் பெண் ‘மேஜர்’ என்பதால் கோர்ட்டு தலையிட முடியவில்லை. திருமணம் என்பது புனிதமானது. தன்னுடைய மகள், மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோருக்கு உரிமை உள்ளது.

காதலன் கைவிட்டு விட்டால் நாங்கள் தான் பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பெற்றோர் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவது நியாயமானது தான். கல்வி உட்பட அனைத்து தேவைகளையும் பெற்றோர்கள் தான் செய்து கொடுக்கின்றனர். குடும்ப பாரம்பரியம், நல்ல பழக்கவழக்கம், அன்பு போன்றவற்றையும் பெற்றோர்கள் தான் கற்றுக்கொடுக்கின்றனர்.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக கம்ப்யூட்டர், எஸ்எம்எஸ், இன்டர்நெட் போன்றவற்றின் மூலம் ஆணும், பெண்ணும் தகவலை பரிமாறி அதன்மூலம் காதல் வயப்படுகின்றனர். பெண்கள் திடீரென்று பெற்றோரை உதறி விட்டு செல்லும்போது அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். வேலைவாய்ப்பின்மை என்பது நாட்டில் அபாய கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நல்ல தகுதி உள்ளவர்களுக்கு கூட வேலை கிடைப்பது இல்லை. இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு உரிய ஆதரவு இல்லாவிட்டால் அந்த பெண் படும் கஷ்டத்தைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை.

18 வயது நிறைவடைந்த பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை வழங்குவதில் எந்த தவறும் இல்லை. அதற்கு உரிய மனநிலை அவர்களிடம் இருக்கும். ஆனால், திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க ஒரு பெண்ணுக்கு 18 வயதில் மனம் மற்றும் உளவியல் ரீதியாக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்ணின் திருமண வயது 18 என்று எந்த அடிப்படையில் அரசு நிர்ணயித்துள்ளது என்பது தெரியவில்லை. எனவே, பெண்ணின் திருமண வயது 18 என்பதை உயர்த்த வேண்டும். அரசு இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.

இந்த வழக்கில், மனுதாரரின் மகள் தனது விருப்பப்படி காதலனுடன் செல்வதாக இன்ஸ்பெக்டரிடம் கூறி வாக்குமூலம் எழுதிக்கொடுத்துள்ளார். ஆனால், மனுதாரர் தன் மகள் மிரட்டல் காரணமாக அதுபோன்று கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களில் பெண் கடத்தப்படவில்லை என்பது விசாரணையின் போது தெரியவந்தாலும் கூட, அந்த பெண்ணை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி உரிய உத்தரவை பெற வேண்டும்” என்றனர்.

தகவல் உதவி :;http://jannalmedia.com/dpages.php?id=1724

error: Content is protected !!