புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் தொடர்ந்து மழை!
வங்கக் கடலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களாக மழை பெய்து வந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்துள்ளதால் தமிழகத்தில் மழை நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால்தொடர்ந்து மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரமணன் “வங்கக் கடலில் தமிழகம்-இலங்கை கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை முற்றிலும் மறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மழை குறைந்துள்ளது. ஆனால் தென்கிழக்கு அரபிக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வங்கக் கடலில் இருந்து ஈரப்பதமான காற்றினை இழுக்கும். அவ்வாறு ஈர்க்கும் போது, அந்த காற்று தமிழக நிலப்பகுதி வழியாக செல்லும். அப்போது தமிழகம் முழுவதும் மழை பெய்யும். அதனால் புதன்கிழமையும் மழை பெய்யும்.
அதேவேளையில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான நிலவரப்படி பழனியில் 200 மி.மீ. மழையும், சத்திரப்பட்டியில் 150 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மயிலாடுதுறையில் 120 மி.மீ. மழையும், குடவாசில் 110 மி.மீ. மழையும் பெய்துள்ளது. ஒட்டபிடாரத்தில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் 30 மி.மீ. மழை பெய்துள்ளது என்றார் அவர்.