பிட் அடிக்க உதவும் பெற்றோர் சாகசம்! – இது பீகார் டென்த் எக்ஸாம் ஸடைல்! வீடியோ
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேசன் தேர்வுகளில் மாணவர்கள் தேர்வறைகளில் சோதனை செய்யப்படுவார்கள். தேர்வறையில் அனுமதிக்காத துண்டு சீட்டுகள், செல்போன் முதலியன வைத்திருந்தால் வினாத்தாள் அல்லது விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை அல்லது நிரந்தரமாக தொடர்ந்து படிக்க தடை, தேர்வெழுத தடை, மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து செய்தல், நிறுத்தம் செய்தல் போன்ற தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பது பொதுவான விதி.
இதனால் தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்கள் பறக்கும் படையினரைப் பார்த்து பயந்து நடுங்குவதுதான் வழக்கம். ஆனால் காப்பி அடிக்கும் மாணவர்களின் தந்திர நடவடிக்கைகளைப் பார்த்து பறக்கும் படை அதிகாரிகள் மட்டுமல்ல பீகார் போலீசாரே செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.
பீகார் மாநிலம் ஹாஜிபூரில் 10-ம் வகுப்பு தேர்வு நடக்கும் பள்ளி ஏதோ போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. மாணவர்கள் சகஜமாக கையில் கொண்டு வந்திருக்கும் பிட்டைப் பார்த்து தேர்வெழுதுகின்றனர். அவர்கள் கொண்டு வர முடியாமல் போன பிட்டை கொடுப்பதற்காக அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர், பெற்றோர் என்று ஒரு பெரிய படையே தேர்வு நடக்கும் பள்ளிக்கு வெளியே முகாமிட்டுள்ளது.
பள்ளிக்கு பின்னால் உள்ள சுவரில் ஏறிக் குதித்து, தேர்வு நடக்கும் 3-வது மாடி வரை ஸ்பைடர்மேன் போன்று ஏறி, தங்கள் பிள்ளைகளை/நண்பர்களை எப்படியும் பரீட்சையில் பாஸ் செய்ய வைத்து விட வேண்டும் என்று உயிரைக் கொடுத்து போராடுகின்றனர். இவர்களைத் தடுக்க பள்ளி வளாகத்திற்குள் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் தேர்வுத்துறை சோதனை அதிகாரிகளும் குவிந்துள்ளனர்.
இருந்தும் இந்தக் கொடுமையை கட்டுப்படுத்த முடிவில்லை, இவ்வளவு ஏன் 500 மாணவர்களுக்கு தேர்வெழுதத் தடை விதித்த போதும் கூட யாரும் பயப்படுவதாகத் தெரியவில்லை என்று அங்கலாய்க்கின்றனர் கல்வித் துறை அதிகாரிகள்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடந்த 12-ம் வகுப்பு தேர்வின் போது 200 மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு உதவிய 12-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கைது செய்யப்பட்டதும் நினைவு கூரத்தக்கது.