பால் காய்ச்சும் பக்குவம் தெரியுமா உங்களுக்கு?

பால் காய்ச்சும் பக்குவம் தெரியுமா உங்களுக்கு?

பாலில் பெரும்பாலும் பசும்பால் அல்லது எருமைப் பால் பயன்படுத்தப்படுகின்றன. அரிதாக ஆட்டின் பாலையும் அருந்துகின்றனர்.பாலைப்போல் சத்துள்ள உணவு வேறொன்றும் இல்லை. தாய்ப் பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசும்பாலே தாய்பால். பசும்பால் எளிதில் ஜீரணமாகும். எனவே குழந்தை களுக்கு பசுவின் பாலே சிறந்ததாகும். பல ஆயுர்வேத மருந்து உண்பவர்களுக்கு பசும் பாலே பரிந்துரைக்கப்படுகிறது.நமது உடலுக்குத் தேவையான புரதம், கனிய உப்புக்கள், கொழுப்பு, கேல்சியம், உயிர்ச்சத்து வகைகள் என்பன அனைத்தும் பாலில் அடங்கியுள்ளன. அதனால் அனைவரும் நாள் தோறும் பிரதான உணவு வகைகளுக்கு மேலதிகமாகக் குறைந்தது ஒரு கோப்பை பாலாவது அருந்த வேண்டும்.உடலின் சூட்டைப் பாதுகாக்க கொழுப்பு வேண்டும். அதுவும் பாலில் நிரம்ப உள்ளது. விசேஷம் என்னவென்றால் இதிலுள்ள கொழுப்பு எளிதில் செரிமானம் அடையக் கூடியது.பாலைக் காய்ச்சும்போது மேலே ஆடை படிகிறதல்லவா? அதுதான் கொழுப்பு. பாலிலுள்ள கொழுப்புப் பகுதியைப் பிரித்தெடுத்து வெண்ணையாகவும், நெய்யாகவும் நாம் பயன்படுத்துகிறோம்.
milk
அத்துடன் காலையில் எழுந்ததும் ஒரு கப் டீயோ, காபியோ குடித்தால்தான்… சுறுசுறுப்பு நாடி நரம் பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம். குழந்தைகளுக்கும், முதியவர் களுக்குமான முக்கியமான ஊட்டச் சத்தும் பால்தான். அப்படி நமக்கு மிக முக்கியமாகிப் போன பாலை நாம் சரியான முறையில் காய்ச்சுகிறோமா..? அப்பா டீ குடிக்கும்போது ஒருமுறை, குழந்தைக்குப் பாலூட்ட ஒரு முறை என பாலை பலமுறை சுடவைக்கும்போது இது சரிதானா என்று யோசித்துப் பார்த்தது உண்டா..?

”பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம்!” என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். ”காய்ச்சிய பாலை 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும்போது அதில் இருக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்ஷியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம்.ஆனால் பாலை அடிக்கடி சுடவைப்பதால் அந்த சத்துக்கள் வீணாகிவிடும் என்றால் பால் குடிப்பதன் காரணமும் வீணாகிவிடும்தானே?!” என்று தெளிவுபடுத்திய அவர்கள் பாலைக் காய்ச்சுவதற்கான காரணத்தைக் கூறினர்.

”பசும்பாலில் இருக்கும் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள், அதைக் காய்ச்சும்போது அழிந்துவிடும். அதனால்தான் பாலைக் காய்ச்சுகிறோம். இன்று பெரும்பாலானவர்கள் பாக்கெட் பால் வாங்குகிறோம். அது ஏற்கெனவே சுத்தம் செய்யப்பட்ட பிறகுதான் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால் அதனை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்கிற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்துவிடலாம். ஆறவிட்டு மீண்டும் சூடாக்கி சூடாக்கி சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம்” என்றவர், பால் காய்ச்சும் முறையை விளக்கினர்

பசும்பால் வாங்குபவர்களுக்கு...

”பால் பொங்கியதும் உடனே இறக்கிவிடாமல் 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால் பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பால் 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.

பாக்கெட் பால் வாங்குபவர்களுக்கு…

‘டோன்டு மில்க்’, ‘பாஸ்டரைஸ்டு மில்க்’ என்று பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கெனவே பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு இருப்பதால் அதை 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.

யு.ஹெச்.டி (அல்ட்ரா ஹை டெம்ப்ரேச்சர்)வகை பால் வாங்குபவர்களுக்கு…

இந்த வகைப் பால் வாங்குபவர்கள் அதைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. சுட வைத்தாலே போதுமானது.

எந்த வகைப் பால் ஆயினும், அதை இரண்டு முறைக்கு மேல் சுட வைக்க வேண்டாம். ஒரு முறை பாலைக் காய்ச்சியபின் அதை ரெஃப்ரிஜிரேட்டரில் வைக்கலாம்.

காபி, டீ என தயார் செய்யும்போது மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் காபி/டீ தேவைப்படுகிறதோ, அந்தளவுக்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்” என்று தெரிவித்தனர்

இதை ஆமோதிக்கும் சித்த மருத்துவர்கள், ”பாலை ‘மைக்ரோ அவன்’ மூலம் சூடு பண்ணுவதைத் தவிர்ப்பதும் நல்லது. காரணம், அதில் சத்துக்கள் எளிதில் ஆவியாகிவிட வாய்ப்புண்டு!” என்பதையும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!