பற்றி எரியும் பெங்களூரில் 144 தடை உத்தரவெல்லாம் இல்லையாம்!
காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகம் கடந்த 6-ந்தேதி இரவு முதல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது இந்த மனுவை விசாரித்த கோர்ட், ”செப்டம்பர் 20-ஆம் தேதி வரை தினமும் 12,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்” என்று இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து பெங்களூருவில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் வாகனங்களை அடித்து நொறுக்கிஉள்ளனர். பெங்களூருவில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கன்னட ஆதரவு அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் வணிக வளாகங்கள் மீது கற்களை வீசிஉள்ளனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தமிழர்களின் கடைகள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த போலீசார், மைசூர் சாலையில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக மூன்று சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல் வந்து உள்ளது. நிலையானது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது, என்றார். பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டது. இதற்கிடையே மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியது.
இப்போது பெங்களூருவில் தடை உத்தரவு இல்லை என்று போலீஸ் மறுப்பு தெரிவித்து உள்ளது. ‘கர்நாடகாவில் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்,’ என்று அம்மாநில முதல்–மந்திரி சித்தராமையா கூறிஉள்ளார். பெங்களூருவில் காவிரி விவகாரம் தொடர்பாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட தமிழக இளைஞர் தாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக சித்தராமையா ட்விட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில் ”கர்நாடகாவில் தமிழக இளைஞரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இளைஞரை தாக்கியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.