பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது!-
10 வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் திங்கள் முதல் வெள்ளி வரையிலான சிறப்பு கல்வி நிகழ்ச்சியினை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் பள்ளி திறக்கும் வரை வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத் தேர்வுகள், கல்வி உதவித் தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ம்தேதி தொடங்கி வைத்தார்.
இத்தொலைக்காட்சியில், எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள், பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
பள்ளிக் கல்வித் துறையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி துவக்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.