நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!

நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!

இன்று நாடு முழுவதும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால், வங்கிப்பணிகள் முடங்கும். ஆட்டோக்கள் ஓடாது. தமிழகத்தில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற் கிறார்கள். அதே சமயம் இந்த வேலைநிறுத்தத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) மட்டும் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
strike
‘குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்ட விதிகளை எந்தவித விதிவிலக்கும் இன்றி அமல்படுத்த வேண்டும், அமைப்புசாரா தொழில் துறைக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப்பெற வேண்டும், விண்ணப்பித்த 45 நாளில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்’ என்பவை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இது தொடர்பாக செப்டம்பர் 2–ந் தேதி (இன்று) ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வோம் எனவும் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.இதையடுத்து திட்டமிட்டபடி, நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் உறுதியாக ஈடுபடுவோம் என ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஜி. சஞ்சீவ ரெட்டி அறிவித்தார். 10 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன.ஆனால் பாரதீய ஜனதா ஆதரவு பெற்ற பி.எம்.எஸ். என்றழைக்கப்படுகிற பாரதீய மஸ்தூர் சங்கம், இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்த வேலை நிறுத்தத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் பங்கு பெறுகின்றன. அவற்றின் 5 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் வங்கிப் பணிகள் அடியோடு முடங்கும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் செய்தி நிறுவனம் ஒன்றுடன் தொலைபேசியில் நேற்று பேசும்போது, ‘‘வேலை நிறுத்தத்தின்போது நாடு முழுவதும் உள்ள வங்கிகள் முன்பாக அதிகாரிகள், ஊழியர்கள் ஊர்வலங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவார்கள்’’ என கூறினார்.

நிலக்கரி, மின்சாரம், சிமெண்டு, ஜவுளி, எண்ணெய், விமானம், காப்பீடு, தபால் துறை பணிகள் பாதிக்கும் என்றும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இந்த வேலைநிறுத்தத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) மட்டும் பங்கேற்க வில்லை என தகவல் வெளியாகி உள்ளது. எனவே அந்த வங்கிக்கிளைகள் மட்டும் வழக்கம்போல இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத பி.எம்.எஸ். பொதுச்செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாய், ‘‘மத்திய தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தத்தில் ஏராளமான பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்; அப்படியே மின்சாரம், எண்ணெய், கியாஸ் வினியோகம் பாதிக்காது. தேசிய அனல்மின்கழகம், தேசிய நீர்மின் கழகம், பவர்கிரீட் ஆகியவையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது’’ என கூறினார்.

தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் தொடர்பாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் கூறுகையில், ‘‘சுமார் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் அல்லாது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம், உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம், வணிகவரி, வருவாய்த்துறை, மருத்துவத்துறை ஆகியவற்றை சேர்ந்த 10 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொள்கிறார்கள்’’ என தெரிவித்தார்.

இன்றைய வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தார்மீக ஆதரவு தெரிவிப் பதாகவும், அதே நேரத்தில் கடைகளை அடைக்குமாறு கூறி, வணிகர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறி உள்ளார். வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 2 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன தலைவர் சந்திரன் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!