நவம்பர் 1 ஆம் தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம்!

நவம்பர் 1 ஆம் தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம்!

தமிழக தமிழர்களே நவம்பர் 1 ஆம் தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம்! தமிழக அரசு இந்நாளை அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்துவோம். இந்தியாவில் மெட்ராஸ் மாகாணம் மொழி வாரியாக பிரிக்கப்பட்டு ஆந்திரா , கேரளம், கர்நாடகா , தமிழ்நாடு உருவாகியது நவம்பர் 1 ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு. இந்த நாளை தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்கள் ராஜ உத்சவ திருவிழாக கொண்டாடி மகிழ்கின்றனர். கர்நாடகாவில் ஒரு மாதம் வரை கொண்டாடுகின்றனர் . இந்த நாளில் கன்னட கொடி ஏற்றி , கன்னட தாய்க்கு மரியாதை செலுத்தி கன்னட தேசிய எழுச்சி திருநாளாக கொண்டாடுகின்றனர் கன்னடர்கள். அதே போல் தெலுங்கர்களும் கொண்டாடுகின்றனர்.இதே நாளில் தான் தமிழகமும் உருவாகியது.
edit tamilnadu
அதாவது தமிழர்கள் அனைவரும் ஒரே ஆட்சியின் கீழ், தமிழ்நாடு என்ற அரசின் கீழ் , தமிழ்நாடு என்ற நிலப்பரப்பின் கீழ், தமிழ்நாடு என்ற அடையாளத்தின் கீழ் வந்த தினம் இந்த நவம்பர் 1 நாள் தான் . அதுவரை தமிழர்கள் தமிழ்நாடு என்ற ஒரு நாட்டின் கீழ் எப்போதும் வாழ்ந்ததில்லை. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தினம் அல்லவா. இந்திய சுதந்திர தினத்தை விட அதிமாக நாம் போற்ற வேண்டிய தினம் அல்லவா ?

தமிழகம் உருவான போது திராவிட இயக்கங்கள் சரியாக போராட முன்வராத காரணத்தால், தமிழகம் இழந்த பகுதிகள் 135,000 சதுர கி மீட்டர் ஆகும். இந்த பகுதிகள் ஆந்திராவும் , கர்நாடகாவும், கேரளாவும் பிரித்துக் கொண்டன. நாம் இவ்வளவு பெரிய நிலப்பரப்பை இழந்தாலும் , தமிழர்களுக்கு என்று ஒரு நிலப்பரப்பை தற்போது பெற்றுக் கொண்டோம் . இது தமிழினம் வாழும் இடமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் , நாம் இருப்பதை காக்கவும் , இழந்ததை மீட்கவும் தமிழகம் உருவான நாளை ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டியது காலத்தில் கட்டாயம் ஆகும்.

மற்ற மாநில மக்களுக்கு தங்கள் மாநிலம் உருவான நாள் தெரியும் . அந்த நாளை அவர்கள் போற்றி கொண்டாடுகிறார்கள் . ஆனால் தமிழனுக்கு மட்டும் தன்னுடைய தமிழ்த் தேசம் உருவான நாள் தெரியாமலே போனது . அதை இந்திய அரசும் , தமிழக அரசும் மறைத்தே வந்துள்ளது. இனியும் நாம் அவ்வாறு அறியாமையில் இருக்க முடியுமா?

நம்முடைய தமிழர் நாட்டை பேணிப் பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை , மொழியை, உரிமைகளை பாதுக்காக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது. அதை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூற நமக்கான ஒரு நாள் வேண்டும் . அந்த வகையில் தமிழர்கள் அனைவரும் தமிழர் கொடியேற்றி கொண்டாடும் விதமாகவும், தமிழ்நாட்டின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் தமிழக அரசு நவம்பர் 1 ஆம் நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அதை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் . அன்று தமிழகம் முழுவதும் தமிழர் வரலாறு , பண்பாடு குறித்த கண்காட்சி இடம்பெற வேண்டும் .

இதை நாம் இப்போது செய்யத் தவறினால் நாளை தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழப்பதோடு மட்டுமில்லாமல் , தமிழகத்தில் தற்போதைய நிலப்பரப்பையும் இழக்க நேரிடும்.அதனால் தமிழக தமிழர்களே நவம்பர் 1 தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம். அனைத்து கட்சித் தலைவர்களும் இதை அரசுக்கு வலியுறுத்தும்படி செய்வோம். இனியாவது தமிழ்நாட்டின், தமிழரின் அடையாளத்தை தக்க வைக்க நம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் .

error: Content is protected !!