தினமலர் ஆசிரியராக இருந்த இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்!

தினமலர் ஆசிரியராக இருந்த இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடீவீஸ்வரம் என்ற கிராமத்தில் 18.01.1933-ல் பிறந்த இரா.கிருஷ்ணமூர்த்தி தனது தந்தை ஸ்ரீ டி.வி.ராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியராக பொறுப்பேற்று திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, புதுச்சேரி, வேலூர், நாகர்கோவில் நகரங்களில் தினமலர் பதிப்புகளை துவக்க காரணமாக இருந்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தினமலர் நாளிதழ் ஆசிரியராக சிறப்புடன் பணியாற்றிய அவர் 2017 வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தவர் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் இராமசுப்பு அவர்கள், 1951 திருவனந்தபுரத்தில் தொடங்கிய தினமலர் நாள் இதழ், 57 முதல் திருநெல்வேலி தச்சநல்லூருக்கு இடம் பெயர்ந்து வந்தது.

அவரது மூத்த மகன் கிருஷ்ணமூர்த்தி , சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றபிறகு, ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.

ஐஏஎஸ் அதிகாரி ஆக மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதை விட, நாள் இதழ் மூலமாக அடித்தட்டு மக்களின் சமூக, கல்வி மேம்பாட்டுக்குப் பெருந்தொண்டு ஆற்ற முடியும் என்ற வேண்டும் என்ற தந்தை இராமசுப்பு ன் அறிவுரையை ஏற்று, தினமலர் நாள் இதழ் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஏற்றுக் கொண்ட இதழ் இயல் துறையில் பல புதுமைகளைப் புகுத்தினார். அயல்நாடுகளில் இருந்து புதிய அச்சுப்பொறிகளை இறக்குமதி செய்து பொருத்தினார். இந்திய நாள் இதழ்களில், டெலிபிரிண்டர்களைப் பயன்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர் ஆனார்.

இன்று, கணிணிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு, உலக அளவில் முதன்மையான பல மொழிகளுடன் போட்டி இடுகின்ற இடத்தில் இருக்கின்றது என்றால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்றால் அது மிகை அல்ல.

எழுத்து உருக்களைக் கையால் அச்சுக்கோர்த்து அச்சிடுகின்ற முறையில் இருந்து மாறி, கணிணிகளில் தட்டச்சு செய்து கோர்ப்பதற்குத் தேவையான, தமிழ் எழுத்து உருக்களை (Fonts) ஆக்கிய முன்னோடி அவர்தான். அதற்காகப் பல நாடுகளுக்குப் பயணித்து, பல்வேறு தமிழ் எழுத்து உருக்களை ஆக்கினார். ஆனால், அந்த எழுத்து உருக்களுக்குக் காப்பு உரிமை செய்து கொள்ளாமல், அனைவரும் பயன்படுத்திக்கொள்கின்ற வகையில், பொதுப்பயன்பாட்டுக்கு அளித்தார். அதன் காரணமாகவே, இன்று கணிணிகளில் தமிழ் சிறப்பு இடம் பெற்று இருக்கின்றது.

அதேபோல, தினமலரில் வெளிவருகின்ற சிறப்புக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட வேண்டும் என சிலர் கூறியபோதும், அது புத்தகங்கள் அச்சிடுகின்ற பதிப்பகங்களைப் பாதிக்கும் எனக்கூறி, அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதழியல் அறத்துடன் இயங்கினார். தினமலர் நாள் இதழுக்கு என தனிப்பட்ட கருத்து இயலை ஆக்கினார்.

பழந்தமிழர் வாழ்வியல் தடங்களை ஆய்வு செய்து, தமிழரின் தொன்மையை நிறுவுவதில், மிகப் பெரும் ஆர்வலராகத் திகழ்ந்தார். அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகவே, காவிரிப் பூம்பட்டினம் ஆராய்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் நாணய இயலின் தந்தை என்கின்ற அளவிற்கு, பழந்தமிழ் நாணயங்கள் சேகரிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் அறிஞராகத் திகழ்ந்தார். அவரது நாணய சேகரிப்புகளும், அந்தத் துறையில் அவர் எழுதி இருக்கின்ற ஆய்வு நூல்களும், தமிழரின் வரலாற்று ஆவணங்கள் ஆகும்.

தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழுக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.

இவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஆந்தை ரிப்போர்ட்டர் டீம் தங்களில் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.

Related Posts

error: Content is protected !!