திட்டமிட்டபடி மலேசியா இசை நிகழ்ச்சி! – இளையராஜா நம்பிக்கை!
“இசைஞானி இளையராஜா தன இசை நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிட்டபடி நிச்சயமாக நடைபெறும் எனறும் இதனால் மலேசிய ரசிகர்கள் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் “என, மலேசிய ரசிகர்களுக்கு பத்திரிகையாளர்கள் மூலம் இளையராஜா நம்பிக்கை அளித்துள்ளார்.இதற்கிடையில் இசைஞானி நாளை டிஸ்ஜார்ஜ் செய்யப்படலாம் எனத் அப்பல்லோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வரும் 28ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரிகர்சலில் அவர் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக அவர் மலேசிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் பரவின. இதனால் மலேசிய ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்ததும் இளையராஜாவின் மகனும், இசையமைப்பாள ருமான யுவன்சங்கர்ராஜா மொபைல் போன் மூலம் இளையராஜாவை மலேசிய பத்திரிகையாளர்களிடம் பேச வைத்தார். அப்போது இளையராஜா பேசியதை பத்திரிகையாளர்கள் அனைவரும் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களிடம் பேசிய இளையராஜா “நல்லாத்தான் இருக்கேன். எப்படி இருக்கீங்க’?னு யாராவது கேட்டால் நான் Usualஆ சொல்றது, ‘அப்டியேதான் இருக்கேன்’னு தான். இப்பவும் அதேதான் சொல்றேன்.என் ஹெல்த்தை பற்றி யாரும் கவலைப்படவேண்டாம். என் ஹெல்த் என்னை நல்லா பார்த்துக்கும். திட்டமிட்டபடி மலேசியாவில் வரும் 28ம் தேதி என்னுடைய இசை நிகழ்ச்சி நடக்கும். அதுனாலே ரசிகர்கள் யாரும் ஏமாற வேண்டாம்.நா வந்துர்றேன்.. வந்துர்றேன்..’ என தெரிவித்தார். இந்த தகவலை மலேசிய பத்திரிகைகள் இன்று முக்கிய செய்தியாக பிரசுரித்துள்ளன. இதற்கிடையில் தீவிர சிகிச்சையில் இருந்து சாதாரண வார்டுக்கு இளையராஜா இன்று மாற்றப்பட்டார். நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.