தரமற்ற உணவு: ரயில்வே கேட்டரிங் நிறுவனத்துக்கு ரூ.11.50 லட்சம் ஃபைன்!
ரயில் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் பணி ஐ.ஆர்.சி.டி.சி. (ரயில்வேஸ் கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேசன்) மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதனிடையே பா.ஜனதா அரசு பதவி ஏற்றதும் ரெயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருள்களை ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.கடந்த 23–ந்தேதி கொல்கத்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்திய போது அங்கு உணவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் புஷ்பக் எக்ஸ் பிரஸ், சிவகங்கா எக்ஸ்பிரஸ், கோல்டன் டெம்பிள் மெயில், நேத்ராவதி எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரெயில்களில் தரமற்ற உணவு விநியோகம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக மற்ற தனியார் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.11.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து 5 முறை இது போன்ற தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டால் அந்த கேட்டரிங் நிறுவனத்துக்கான லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி ராஜ்தானி, தூரந்தோ, சதாப்தி உள்பட 6 சொகுசு ரெயில்களில் சிக்கன் செட்டி நாடு, ஐதராபாத் பிரியாணி, சாம்பார் சாதம் வழங்கவும் கை துடைப்பான்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.