தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் & கோ செயல்பட இடைக்கால தடை!
கடந்த 7ம் தேதி நடந்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விதிப்படி நடக்கவில்லை என்றும்,மேலும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் மற்றும் நிர்வாகிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதாகர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் மற்றும் நிர்வாகிகள் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் சுப்ரீம் பவரான சங்கம் முடங்கிப் போனது கோலிவுட்டில் சோக செய்தியாக் பரவி வருகிறது.
சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த கலைப்புலி தாணு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கேயாரும் அவரது ஆதரவாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக தேர்தலில் போட்டியிடுபவர்கள் விளம்பரம் எதுவும் செய்யக்கூடாது என விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் கேயாரும் அவரது ஆதரவாளர்களும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். இதனால் அவர்களது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும். அவர்கள் பணி செய்யவும் தடை விதிக்க வேண்டும். கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தால் அவற்றை அமல்படுத்தவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சுதாகர் விசாரித்தார். மனுதாரர் சார்பாக வக்கீல்கள் முத்துக்குமாரசாமி, மகேஸ்வரி ஆகியோர் ஆஜராகி, தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளோம். இவற்றை பரிசீலித்து தடை விதிக்க வேண்டும் என்றனர். கேயார் சார்பில் தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதைக் கேட்ட நீதிபதி, “இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கேயாரும் அவரது அணியினரும் பணியாற்ற தடை விதிக்கிறேன். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது :என்று தெரிவிததுள்ளார்.
கோடங்கி