தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நாளை உண்ணாவிரதம்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்,
தென்னிந்திய நடிகர் சங்கம் , தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகியோர் ஒரு கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அதில்,”தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் ‘கியூப்’ மற்றும் யு.எப்.ஓ. போன்ற ‘டிஜிட்டல்’ நிறுவனங்களை கண்டிக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் திரையுலகத்தை சேர்ந்த முன்னோடிகள் அனைவரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறோம்.
நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும். இதன் நோக்கம் தயாரிப்பாளர்களிடம் இருந்து திரைப்படங்களை ‘டிஜிட்டல்’ முறையில் வெளியிடுவதற்கான கட்டணத்தை அதிகமாக பெற்றுக்கொண்டு, அதன் மூலம் திரையரங்குகளில் விளம்பரம் மூலமாக வருடத்துக்கு சுமார் ரூ.400 கோடியை தயாரிப்பாளர்களுக்கு தர மறுப்பதுடன், ‘கியூப்’, ‘யு.எப்.ஓ’ மற்றும் சில நிறுவனங்கள் பங்குபோட்டு கொள்கின்றனர்.
இது தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்வாதாரத்தை நசுக்க நினைக்கும் செயல். மேற்கண்ட நிறுவனங்களின் செயலை தமிழக அரசுக்கு கொண்டு வரும் வகையிலும், தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய சுமார் 400 கோடி ரூபாயை தர மறுக்கும் நிறுவனங்களை கண்டிக்கும் வகையிலும் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
தாயன்போடு வழிநடத்தும் மக்களின் முதல்வர் ‘அம்மா’ அவர்களின் ஆசியோடு அந்த நிறுவனங்களை தமிழக அரசே ஏற்று நடத்தி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களையும், திரையுலகின் வாழ்வாதாரத்தையும் மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் சிறிய முதலீட்டு படங்களின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிரமத்தையும், அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பையும் கருத்தில் கொண்டு, அதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு ஒரு முடிவு எடுத்திருக்கிறது.
அதன்படி, ரூ.15 கோடிக்கு மேல் உருவாகும் பெரிய முதலீட்டு திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர்கள் பொங்கல், ஜனவரி 26, ஏப்ரல் 14, மே 1, ஆகஸ்டு 15, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, ரம்சான், கிறிஸ்துமஸ் ஆகிய 10 நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும்.
ரூ.15 கோடிக்கு கீழ் தயாரிக்கப்படும் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர் விரும்பும் எந்த ஒரு நாட்களிலும் வெளியிட்டு கொள்ளலாம். இந்த சுய கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.