தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு! – மத்திய அரசு தகவல்!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவ மனைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டில் கடந்த 15-ம் தேதி வரை 12,945 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 பேர் உயிரிழந்தி ருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஒரு வாரத்தில் மட்டும் 1,520 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் கடந்த 22-ம் தேதி வரை நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் 1 லட்சத்து 794 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 172 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-ம் இடத்தில் தமிழகம்
கேரளாவில் 19,053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு பாதிப்பில் இரண்டாம் இடம் பிடித்துள்ள தமிழகத்தில் 14,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 13,673 பேர் பாதிக்கப்பட்டு, 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.