தமிழகத்தில் ஜெ-வுக்கு ஆதரவாக அக்டோபர் 7ம் தேதி தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி ஏற்கனவே கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது தனியார் பள்ளி நிர்வாகங்களும் இணைந்துள்ளனர்.ஆம்.. வரும் 7ம் தேதி தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது. இதனால், தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் ஜெயலலிதா.ஜெயலலிதாவிற்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் போராட்டாங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினருடன் இணைந்து மற்ற துறையினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், வரும் 7ம் தேதி ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அதன்படி, அன்று தமிழகத்தில் 4,500 பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப் பட்டுள்ளது.