தடையை மீறி மஞ்சுவிரட்டு!

தடையை மீறி மஞ்சுவிரட்டு!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி விலங்குகள் நலவாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கோர்ட், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. ஆனால் பாலமேடு அருகே உள்ள ராஜாக்கள்பட்டியில் சிலர் ஜல்லிக்கட்டு காளைகளை கயிற்றில் கட்டி தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தினர். இதை பார்ப்பதற்காக சுற்றுவட்டார கிராமங் களில் இருந்து பொதுமக்கள் திரண்டனர். இதேபோல் மேலும் சில பகுதிகளிலும் காளைகளை ஆங்காங்கே அவிழ்த்துவிட்டனர். போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.
jalli jan 17
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருடன் ஊர் பொதுமக்கள் இணைந்து வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காளைகளுடன் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி னர். தங்கள் மாடுகளை குளிப்பாட்டுவதற்காக கொண்டு செல்வதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். இதுதொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவனியாபுரம் பகுதியில் ஒரு டவுன் பஸ் மீது கல் வீசப்பட்டதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் ஜல்லிக்கட்டு பேரவையினர் கருப்பு கொடி பேரணி நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்ட காளைமாடுகள், குதிரை, ரேக்ளா வண்டிகளும் கலந்து கொண்டன. பஸ் நிலையத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டியில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து போகும்படி கூறினார்கள். அங்கிருந்து ஊருக்குள் சென்ற அவர்கள் தடையை மீறி எருது விட்டு வீரவிளையாட்டில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு போல், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று சிங்கம்புணரியில் தடையை மீறி சுற்றுவட்டார கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட காளைகளுடன் வந்து அவற்றை அவிழ்த்துவிட்டனர். காளைகளின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த துண்டு, ரூபாய் நோட்டு மாலை, கரும்பு ஆகியவற்றை எடுக்க மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்கினர். இதேபோல் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று காளைகளின் கழுத்தில் கரும்பு, ரூபாய் நோட்டு மாலைகள் அணிவித்து அவிழ்த்துவிட்டனர். ஏராளமான கிராமங்களில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிகள் தடையை மீறி நடந்தன. நூற்றுக்கணக்கான காளைகள் இதில் பங்கேற்றன. மாடு பிடி வீரர்கள் மாடுகளை பிடிக்க போட்டி போட்டு களத்தில் இறங்கினர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து மாடுகளை அவிழ்த்துவிட்டனர். இதனால் காளைகள் சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!