ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞருக்கு மீண்டும் அபராதம்!
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி மைக்கேல் ஜான் குன்கா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானி சிங், தமக்கு உடல் நிலை சரியில்லாததால், பத்து நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், அதுவரை இறுதி வாதத்தை தொடங்க இயலாது எனவும் கூறினார்.கூடவே இதுதொடர்பாக அவர் மருத்துவச் சான்றிதழையும் நீதிபதியிடம் அளித்தார். ஆனால், அதை நிராகரித்த நீதிபதி குன்கா, இறுதி வாதத்தை சனிக்கிழமை தொடங்குமாறு உத்தரவிட்டார். மேலும், இறுதி வாதத்தை நேற்று தொடங்காத காரணத்தால், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு அவரின் ஒரு நாள் சம்பளமான 65 ஆயிரம் ரூபாயை அபராதமாகவும் நீதிபதி விதித்தார்.இந்த நிலையில், அரசு வழக்கறிஞர் பவானிசிங் இன்றும் விவாதம் தொடங்க வராததால் அவருக்கு மீண்டும் ரூ 65 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பவானி சிங் தொடர்ந்து ஆஜராகாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் , வரும் 21ஆம் தேதி இறுதி வாதத்தை கண்டிப்பாக தொடங்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டிகுணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் ஆஜராகாமல் இருக்க விலக்களிக்க கோரி அவர்களின் வக்கீல்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றார்.
பின்னர், நீதிபதியிடம் அரசு வக்கீல் பவானி சிங் அளித்த மனுவில், ‘எனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முதுகு தண்டு வலி பிரச்னைகள் இருந்ததால் என்னால் கடந்த 2 விசாரணையின் போது ஆஜராக முடியவில்லை. இந்த நோய் பிரச்னைகள் தொடர்வதால் என்னை மேலும் 10 நாட்கள் மருத்துவர்கள் ஓய்வெடுக்க கூறியுள்ளனர். அதற்கான மருத்துவ சான்றிதழை இத்துடன் இணைத்துள்ளேன்’ என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிக்கும், பவானி சிங்குக்கும் நடத்த வாதத்தின் விவரம் வருமாறு:
நீதிபதி : விசாரணையை தாமதம் செய்யவே இது போன்று நடந்து கொள்கிறீர்கள். உங்கள் காரணத்தை ஏற்க முடியாது. எனவே, இன்றே உங்கள் தரப்பு வாதத்தை தொடங்கலாம்.
பவானி சிங் : நான் வாதத்துக்கு தயாராக வரவில்லை.
நீதிபதி : உங்கள் உதவியாளர்கள் வாதம் செய்யட்டும்.
பவானி சிங் : இது முக்கியமான வாதம், எனவே நான்தான் வாதாட வேண்டும். அவர்களுக்கு தெரியாது.
நீதிபதி: உச்ச நீதிமன்றம் என்ன காரணத்துக்காக இந்த தனி நீதிமன்றத்தை அமைத்ததோ, அதன் நோக்கம் நிறைவேற வேண்டும். தினமும் வாதத்தை நடத்தி வழக்கை விரைந்து முடிக்க அரசு வக்கீல் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், தேவையற்ற காரணங்களை கூறி வழக்கை இழுத்தடிப்பதால் அரசு வக்கீலுக்கு ஸி65 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன். இன்று அரசு தரப்பு வாதத்தை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் 65 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும்.
இவ்வாறு நீதிபதி, அரசு வக்கீல் இடையே வாதம் நடந்தது.
இதை தொடர்ந்து, ‘‘குற்றவாளிகள் தரப்பு தங்கள் வாதத்தை தொடங்கலாம்‘‘ என்று நீதிபதி கூறினார். ஆனால், ‘அரசு தரப்பு வாதம் முடிந்தால் தான் எங்கள் வாதத்தை துவக்குவோம்‘ என்று அவர்கள் மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்து.