செவ்வாய் கிரகத்தில் செட்டிலாக போகும் இரண்டு சேச்சிகள்!
செவ்வாய் கிரக தோஷம் இருந்தால் அந்த பெண்ணிற்கு திருமணம் நடப்பது லேசான காரியமல்ல என்பார்கள்.இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஒன்ஸ் இன் மென் லைப் டைம் ஆப்பர் சூனிட்டி’ என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்தில் குடியேற ஆர்வம் உள்ளவர்களுக்கு இணைய தளம் மூலம் ‘மார்ஸ் விண்’ என்ற போட்டியை நடத்தியது. செவ்வாய்கிரகத்தில் குடியேறுவது ஆபத்தானதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் பலனளிக்குமா?, என்பதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் போட்டி போட்டுக் கொண்டு உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இந்த போட்டியில் பங்கேற்றனர். இவர்களில் இருந்து 706 பேரை அந்த அமைப்பு தேர்வு செய்துள்ளது. தற்காலிக பட்டியல் என்று அறிவிக்கப்பட்டுள்ள இதில் 17 பெண்கள் உள்பட 44 இந்தியர்களும் இடம் பெற்று உள்ளனர்.செவ்வாய் கிரகத்தில் குடியேறுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிர்ஷ்டசாலிகளில் 2 பேர் கேரளாவைச் சேர்ந்த பெண்கள் ஆவர். இவர்களில் ஒருவர் பெயர் திரதா. பாலக்காடை சேர்ந்த இவர் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 முடித்து விட்டு மேல்படிப்பு படிக்க ஏற்பாடு செய்து வருகிறார்.இன்னொருவர் லேகா, இவரது சொந்த ஊர் பாலக்காடு. பட்டப்படிப்பு படித்துள்ள இவரது கணவர் பெயர் விமல்குமார். இவர் அயர்லாந்து நாட்டில் ஐ.டி.கம்பெனியில் இவர் அதிகாரியாக உள்ளார்.
விண்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும் மனிதன் உயிர் வாழ ஏற்ற சூழல் பூமியில் மட்டுமே உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மற்ற கிரகங்களில் மனிதன் குடியேறும் சூழல் உள்ளதா? என்பது பற்றிய ஆராய்ச்சி உலகம் முழுக்க தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வுகளின் மூலம் சிகப்பு நிற கிரகமான செவ்வாய் கிரகத்தில் மனிதன் எதிர்காலத்தில் குடியேறும்சூழலை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகளின் இந்த அறிவிப்புக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் குடியேற பலருக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. இதில் மற்றொரு வேடிக்கை என்ன தெரியுமா? விண்வெளி ஆய்வில் நெதர்லாந்து குறிப்பிடத்தக்க சாதனை எதையும் இதுவரை செய்ததில்லை என்று சொல்லப்படுவதுதான். இதற்கிடையில் செவ்வாய்கிரகத்துக்கு பயணம் செய்யும் அதிர்ஷ்டசாலியாக தேர்வு பெற்றதால் இந்த 2 சேச்சிகளும் இப்போதே வான்வெளியில் மிதப்பது போல மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்கிரகத்துக்கு செல்லும் தற்காலிக பட்டியலில் உள்ள 706 பேருக்கும் 10 ஆண்டுகள் விசேஷ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்பிறகு அவர்களில் இருந்து 24 பேர் தேர்வு செய்யப்பட்டு செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். முதல் கட்டமாக 4 பேர் செவ்வாய்கிரகத்துக்கு செல்ல உள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கான முதல் பயணம் 2024–ல் தான் தொடங்க உள்ளது. இந்த பயணத்துக்கு 600 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.marsone.com என்ற இனணயதளத்தில் அணுகலாம்