சென்னை நகர வீதிகளில் நடக்கும் ‘ ஜன்னல் ஓரம்’ திரைப்பட இசை வெளியீடு!
அண்மையில் மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்பட போஸ்டரை அதன் இயக்குனரே ஒவ்வொரு ஊரிலும் போய் ஒட்டியது நினைவிருக்கும். இச்சுழ்நிலையில் கரு.பழனியப்பன் இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், தயாராகியுள்ள ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் இசை வெளியீடு, நாளை (17-10-2013) சென்னை மாநகரமெங்கும் போய் மக்கள் வாழ்த்துகளை பெற்று மக்கள் முன்னிலையிலேயே நடத்தப்பட உள்ளது.
இப்படத்தில் பார்த்திபன், விமல் இருவரும் ஓட்டுனராகவும், நடத்துனராகவும் நடித்துள்ளனர்.இவர்களுடன் மற்ற நட்சத்திரங்களான விதார்த், மனிஷா, பூர்ணா, ரமணா, சிங்கம்புலி, ராஜேஷ் போன்றோர் மற்ற நட்சத்திரங்களுடன் ஒரு சிறப்பு மாநகரப் பேருந்தில் சென்னையை வலம் வந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்குனர் கரு.பழனியப்பன், வித்யாசகர் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஒரு பேருந்து காலை 8.00 மணிக்கு சென்னை, வட பழனி பேருந்து நிலையத்திலிருந்து கொண்டாட்டத்துடன் தன் ஜன்னல் ஓரப் பயணத்தை துவக்குகிறது.
தொடர்ந்து கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் முன்னிலையில் ‘ஜன்னல் ஓரம்’ படப் பாடல்கள் வெளியிடப்படும்.
கடைசியாக மாலை 6.00 மணிக்கு சென்னை, கமலா திரையரங்கத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில், திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் சூர்யா படத்தின் டிரைலரையும், பாடல் காட்சிகளையும் வெளியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.