சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு சுங்க வரி ரத்து! – மத்திய அரசு முடிவு

சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு சுங்க வரி ரத்து! – மத்திய அரசு முடிவு

நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில், அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை பராமரிப்பு பணிகளுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, முக்கிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு, அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பஸ் மற்றும் தனியாருக்கு சொந்தமான, வர்த்தக பயன்பாடு அல்லாத, கார், ஜீப், இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், பிரதமரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
toll gates
இன்றையா இந்தியாவின் பெரும்பாலும் நாற்கர சாலைகள் அமைக்கப்பட்ட பின்பு, சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் பஸ், கார், ஜீப், வேன் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சுங்க வரியை வசூலிக்கும் நிறுவனங்களில் பல தங்களுக்குரிய பகுதிகளில் சாலையை சரிவர பராமரிப்பதில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் இந்த சுங்கச்சாவடிகள் பெரும் தடையாக இருப்பதும் கண்கூடு.

இது தவிர, தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தேசிய சாலைகள் வழியாக வாகனங்களில் செல்வதற்கு கூட பொதுமக்கள் சுங்க வரி செலுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதே நேரம் சுங்கச்சாவடிகளில் பெறப்படும் மொத்த வருவாயில் 14 சதவீதம் மட்டுமே மத்திய அரசுக்கு கிடைத்து வருகிறது.

அண்மையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகள் பற்றி நாடு முழுவதும் எடுத்த ஆய்வில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. இது போன்ற குறைபாடுகளை களைவதற்கும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் வரியை ரத்து செய்ய நிதின் கட்காரி தலைமையிலான மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.

இதற்கான பரிந்துரை ஒன்றை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அளித்து உள்ளது. இதன்படி பஸ், தனியார் வாகனங்களான கார், ஜீப் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் சுங்கவரி அடியோடு ரத்து செய்யப்படும். அதாவது, இனி வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் பெறப்படும்.

இதன் மூலம் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மத்திய அரசுக்கு சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அதே நேரம் இந்த இழப்பை ஈடுகட்டுவதற்கு பரிந்துரையில் 3 வித யோசனைகளும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை கூடுதலாக 1 ரூபாய் அதிகரிப்பது, புதிய வாகனங்கள் வாங்கும்போது அதன் மீது கூடுதலாக 2 சதவீத வரிவிதிப்பது ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டும் இருக்கிறது. ஏற்கனவே உள்ள வாகனங்கள் சுங்கச்சாவடிகளை பயன்படுத்திக்கொள்ள ஒரே கட்ட தொகையாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கவும் இத்திட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த 3 கட்ட திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 2014-2019-ம் ஆண்டுகளில் மத்திய அரசுக்கு 32 ஆயிரத்து 609 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அதாவது, மதிப்பிடப்பட்டுள்ள இழப்பை விட சுமார் 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அதிக வருவாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதியாக இருப்பதாகவும், இது தொடர்பான இறுதி பரிந்துரையை அவர் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

error: Content is protected !!