கொரோனா தாக்கம் முடிஞ்சிட்டுதுன்னு நெனக்காதீங்க- மோடி எச்சரிக்கை

கொரோனா தாக்கம் முடிஞ்சிட்டுதுன்னு நெனக்காதீங்க- மோடி எச்சரிக்கை

கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்றும் கொரோனா இன்னும் ஆபத்தானதாகவே உள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர் மோடி, சவாலான காலக்கட்டத்தை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார் அப்போது அவர் பேசியதன் சாராம்சம் இதோ:

இன்றைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்கில் போர் நினைவு தினத்தில் நாம் வெற்றி பெற்ற நாளாகும். 21 ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில் கார்கில் தினத்தில் இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் வெற்றிக் கொடியை நிலைநாட்டினர். கார்கில் போர் நடந்த சூழ்நிலையை இந்தியா ஒருபோதும் மறக்காது.

கார்கில் போரில் உயிர்நீத்த நமது வீரர்களின் கதைகளை தாய்மார்களின் தியாகத்தை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். போர் சூழ்நிலையில், நாம் செய்யும் செயல்கள், பேசும் சொற்கள் நமது வீரர்களின் மனதளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, வீரர்களின் மன வலிமையை அதிகரிக்கும் விதத்தில் நமது பேச்சு இருக்க வேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை மற்ற நாடுகளைவிட சிறப்பானதாய் உள்ளது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.“கொரோனா வைரஸ் தொடக்க நிலையில் இருந்ததை போலவே தற்போதும் ஆபத்தானதாகவே உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் சிறப்பாக இருக்கிறது. அதேபோன்று இறப்பு எண்ணிக்கை நாட்டில் குறைவாகவே இருக்கிறது.அரசும், மக்களின் உயிர்களை காக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் அபாயம் இன்னும் போகவில்லை. எனவே நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அசௌகரியமாக இருந்தாலும், தொடர்ந்து முகக்கவசத்தை அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தூய்மையைப் பின்பற்ற வேண்டும்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் செவிலியர்கள் போன்றோரின் சேவையை சிந்தித்து பார்க்க வேண்டும். அவர்கள் மணிக்கணக்கில் பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனாவுக்கு எதிராக போராடும் அதே சமயத்தில் மற்றொரு பக்கம் தொழில், வேலை, படிப்பு என மற்ற விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் நகரத்திலிருந்து கிராமப்புறம் வரை அனைவரும் கரோனாவுக்கு எதிராக நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்முவின் த்ரேவா பகுதி கிராமப் பஞ்சாயத்து தலைவர் தனது பகுதியில் தனது சொந்த முயற்சியில் 30 படுக்கைகள் கொண்ட ஒரு தனிமைப்படுத்தும் மையத்தை உருவாக்கியுள்ளார். மேலும் தன்னார்வலர்களுடன் இணைந்து தனது பஞ்சாயத்து முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

காஷ்மீரைச் சேர்ந்த ஜைதூனா பேகம் என்பவர் தங்கள் பகுதியில் இலவச முகக்கவசம், ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறார். கரோனா காலத்திலும் இளைஞர்களும் பெண்களும் தங்களுடைய திறமைகளைக் கொண்டு புதிய வழிமுறைகளை கையாள்கின்றனர்.

பிகார், அசாம் போன்ற மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கான மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத கசாயம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.கொரோனா தொற்று நிலவும் இதே சூழ்நிலையில் மற்ற நோய்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வரவுள்ள சுதந்திர தின விழாவில், கரோனா தொற்றில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற மன உறுதியை ஏற்போம்.சுதந்திர தினத்தன்று பல மகத்தான மனிதர்களின் தியாகத்தை நினைவு கூற வேண்டும்.அவர்களது தியாகத்தின் முயற்சியின் பலனாகவே நாம் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!