காவல் துறை மீது தவறான பார்வை வர திரைப்படத் துறைதான் காரணம்! மோடி பேச்சு.
”காவல்துறை மீது சாதாரண மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட திரைப்படங்களும் ஒரு காரணம் என்று பிரதமர் மோடி பகிங்கரமாக குற்றம் சாட்டியுள்ளார். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் டிஜிபிக்கள் மாநாட்டில் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார்.
கவுகாத்தியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற டிஜிபி, ஐஜி மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகளின் தலைமைகளின் 49-வது ஆண்டு மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.அப்போது, “காவல் துறையினர் மீது சாமானிய மக்கள் மிகவும் தவறான பார்வைக் கொண்டிருப்பதற்கு திரைப்படத் துறைதான் காரணம். ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என்று அவர்களை நான் கேட்கிறேன். சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், அதை மட்டுமே அழுத்தமாக பதிவு செய்வதா?
காவல் துறையைப் பற்றி மோசமான பார்வையை அகற்றிவிட்டு, நல்ல விதமாக நிறைகளை மக்களிடம் சொல்ல வேண்டியது திரைப்படங்களின் கடமை.சாமானிய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதில் திரைப்படங்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. காவல் துறை வெற்றிகரமாக இயங்குவதற்கு அவர்களது ஒத்துழைப்பும் அவசியம்.
காவல் துறை பற்றிய உண்மையைக் காட்டி, மக்கள் மனதில் நன்மதிப்பு ஏற்படும் வகையி, நீண்ட கால வியூகத்தை நாம் வகுத்திட வேண்டும்.பாலிவுட் நடிகர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் தவறாமல் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அதேபோல், காவல் துறையின் நிறைகள் குறித்த ஆயிரக்கணக்கான செய்திகள் இருக்கும்போது, குறைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் போக்கை ஊடகங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்”
‘அதே சமயம் காவல் துறை சிறப்புடன் செயல்பட ஸ்மார்ட் (SMART) என்ற அடிப்படையைப் பின்பற்ற வேண்டும்.அதாவது, கடுமையாகவும் உணர்வுடனும் நடந்துகொள்ளுதல் (Strict and Sensitive), நவீனத்தைப் பின்பற்றி, எளிதில் அணுகும் விதமாகவும் செயல்படுதல் (Modern and Mobile), விழிப்புடனும் உத்தரவாதத்துடனும் செயல்படுதல் (Alert and Accountable), நம்பகத்தன்மையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளுதல் (Reliable and Responsive) மற்றும் தொழில்நுட்ப அறிவுடனும் திறனுடனும் (Techno-savvy and Trained) செயல்படுதல் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் .மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தனி வலைதளம் அமைத்து, காவல் துறையில் சிறப்பான செயல்பாடுகளை அதில் வாரந்தோறும் பதிவேற்றம் செய்ய வேண்டும்”என்றெல்லாம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.