கரன்சி நோட்டுகளை ஒழிக்க ஆர்.பி.ஐ.அடுத்தடுத்து கிடுக்கிப்பிடி!

கரன்சி நோட்டுகளை ஒழிக்க ஆர்.பி.ஐ.அடுத்தடுத்து கிடுக்கிப்பிடி!

ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு பின்னர் புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. குறைவான அளவிலேயே புதிய ரூபாய் நோட்டுகள் வெளியானதால் நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து மக்கள் அனைவரும் ரொக்க பண வரவு செலவை தவிர்த்து ‘டிஜிட்டல்’ பணபரிமாற்றத்தை மேற்கொள்ள மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.இதனையடுத்து சிறு மற்றும் குறு வர்த்தகர்கள் ‘டிஜிட்டல்’ பண பரிமாற்றம் மேற்கொள்வதற்காக ‘ஸ்வைப்’ எந்திரங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இது ஓரளவு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ‘டிஜிட்டல்’ வரவு செலவை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

rbi dec 20

இந் நிலையில் புதிய சலுகையாக வங்கிகள் மற்றும் ‘டிஜிட்டல்’ பணபரிமாற்றம் மூலமாக ரூ.2 கோடி வரை வர்த்தகம் மேற்கொள்ளும் சிறு வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு வரியில் 2 சதவீதம் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுவணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு இதுவரை லாபத்தில் 8 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ‘டிஜிட்டல்’ பணபரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகை அளிக்கப்படுகிறது.

அதன்படி, ‘டிஜிட்டல்’ பணபரிமாற்றத்தை பயன்படுத்தும் ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை வர்த்தகம் மேற்கொள்ளும் சிறுவணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு 2 சதவீதம் வரி குறைக்கப்படுகிறது. எனவே அவர்கள் இனி லாபத்தில் 6 சதவீதம் வரி செலுத்தினால் போதும். ஆனால் ரொக்க வரவு செலவு மேற்கொள்ளும் சிறுவணிகர்களுக்கு பழையபடி 8 சதவீத வரியே தொடரும்.இதுதொடர்பான சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும்”
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே கறுப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்தும் விதமாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு ரிசர்வ் வங்கி நேற்று மேலும் சில கடுமையான நிபந்தனைகளை விதித்தது. வங்கி கணக்குகளில் கருப்பு பணம் டெபாசிட் ஆகாமல் தடுப்பதற்காக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

இதுபற்றி ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் இனி நாள் ஒன்றுக்கு தனது கணக்கில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை டெபாசிட் செய்யலாம். அது குறித்து எந்த கேள்வியும் வங்கியால் கேட்கப்படமாட்டாது. அறிவிக்கப்பட்டு உள்ள காலக்கெடுவான டிசம்பர் 30-ந் தேதிக்குள் இதுபோல் பணத்தை செலுத்தலாம். இந்த தொகை அதுவரை வரவில் மட்டுமே வைக்கப்படும்.
அதே நேரம், ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாடிக்கையாளர் தனது கணக்கில் இனி டெபாசிட் செய்தால் டிசம்பர் 30-ந் தேதிக்குள் அவரால் ஒரே ஒரு முறை மட்டுமே இதுபோல் பணத்தை செலுத்த முடியும்.

தவிர, ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை பழைய ரூபாய் நோட்டுகளாக டெபாசிட் செய்யும்போது அந்த பணத்தை அதுவரை மாற்றிக்கொள்ளாததற்கு உரிய காரணத்தையும் வாடிக்கையாளர் வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும்.அந்த காரணத்தை வங்கி அதிகாரிகள் இருவர், வாடிக்கையாளரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து கொள்வார்கள். பின்வரும் காலங்களில் தணிக்கை பரிசோதனைக்கு இந்த விளக்கம் உதவுவதாக அமையும்.
ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான தொகைக்கு பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்போது, டிசம்பர் 30-ந் தேதி வரை அதுபோல் அடுத்தடுத்து டெபாசிட் செய்யும் பணத்துடன் அந்த தொகை ஒட்டுமொத்தமாக சேர்த்து கணக்கிடப்படும்.

இதில் பழைய ரூபாய் நோட்டுகளாக செலுத்திய மொத்த தொகை ரூ.5 ஆயிரத்துக்கும் மேற்பட்டு இருந்தால், அது தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்த தொகையாக கணக்கிடப்படும்.
அதேபோல் 3-ம் நபர் கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்போது அது 3-வது நபரின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும். இப்படி பணம் டெபாசிட் செய்யும்போது 3-வது நபரும் உடன் இருக்கவேண்டும்.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பட்டியலிடப்பட்ட 29 வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்.” என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

error: Content is protected !!