கமல் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் கமலஹாசனுக்கு இது போதாத காலம் போல. ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் பல முறை இவர் மருத்துவமனைக்கு சென்று வந்துவிட்டார். நெல்லையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தபோது ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் 1 மாதம் ஓய்வுக்குப் பின்னர் கடந்த வாரம் முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் கமலுக்கு திடீர் முதுகு வலி ஏற்பட்டது. இதனால் மீண்டும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இப்போது 3வது முறையாக நேற்று மீண்டும் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். நேற்று கேரள மாநிலம் தொடுபுழாவில் பாபநாசத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இந்தப்படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் கலாபவன் மணி நடிக்கிறார்.
இவர் தான் இதில் முக்கிய வில்லனாக வருகிறார். நேற்று கலாபவன் மணி, கமலஹாசனை அடித்து உதைப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதில் கமலின் மூக்கு வீங்குவது போல மேக்கப் போடப்பட்டது. இதற்காக மூக்கினுள் ஒரு ரப்பர் துண்டை வைத்து கமல் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ரப்பர் துண்டு கமலின் மூக்கினுள் சிக்கிக்கொண்டது. இதில் அவருக்கு லேசாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த டைரக்டர் ஜீத்து ஜோசப் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தினார். கமலை அடுத்த ஒரு சில நிமிடங்களில் தொடுபுழாவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் டாக்டர்கள் விரைந்து செயல்பட்டு என்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் ரப்பர் துண்டை மூக்கிலிருந்து வெளியே எடுத்தனர். இதன் பிறகே படப்பிடிப்புக் குழுவினர் நிம்மதியடைந்தனர். சிகிச்சைக்குப் பின்னர் டாக்டர்கள், நர்சுகள் உட்பட அனைவருக்கும் கமல் நன்றி தெரிவித்தார். அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் கமல் மறக்கவில்லை. சில மணிநேர ஓய்வுக்குப் பின் கமல் மீண்டும் சுறுசுறுப்பாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.