ஓ..வென்று பெண்கள் கதறி அழ உதவும் ‘ஒப்பாரி அறை’- ஜப்பான் ஏற்பாடு!
அழுகை உண்மையில் பலன் தருகிறது. மன அழுத்தம் குறைவதால் மனமும், இதயமும் பாதிப்படைவது குறைகிறது.ஒவ்வொருவரும் கண்ணீர் விடுவது நல்லது. கண்ணீரில் மங்கனீசியம் அதிக அளவில் உள்ளது. கண்ணீர் மன அழுத்தத்தினால் ஏற்படும் ரசாயணத்தை சுத்தம் செய்கிறது. அதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.
நம் கண்களில் சோக கண்ணீர் தவிர உணர்ச்சி வசப்படுவதாலும் கண்ணீர் வரும். அதனால் கண் சுத்தமாவதுடன் கண்ணிற்கு ஈரப்பசையும் கிடைக்கிறது. உணர்ச்சி வசப்படுவதால் வரும் கண்ணீர் நம்மைப் பாது காக்கிறது. கண்ணீர் வரும் போது நாம் எங்கே பார்க்கின்றோம் என்பதை எதிரில் உள்ளவர்கள் கண்டு கொள்ள இயலாது அல்லது நம்மை அவர்களுடன் சமாதானம் விரும்புபவராக, நம்பிக்கையாளராக நம்மைக் காட்டுகிறது.
மிருகங்கள் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விடுவதாக கூறுவது மறுக்கப் படுகிறது.மிருகங்கள் கண்ணீர் விடுவது கண்களை சுத்தம் செய்யவதற்கு மட்டுமே என்று சிலர் வாதிடுகின்றனர்.
அதே சமயம் கண்ணீர் விடும் பழக்கம் வசதியாக பெண்களிடம் அதிகம் உள்ளது. அழும் பழக்கம் உள்ளதால் பெண்களிடம் சோகமும், கோபமும் குறைந்து விடுகின்றன. வரும் அழுகையை அடக்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உணர்வுகளை உள்ளுக்குள் அடக்குவதால் மன அழுத்தம் ஏற்படும்.
இந்நிலையில் குடும்பப் பிரச்சனை, காதல் தோல்வி, உறவினர் பிரிவு, பெற்றோர் மறைவு, வேலை அழுத்தத்தினால் ஏற்படும் வெறுப்பு உள்ளிட்ட பல்வேறு மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு.., குறிப்பாக, பெண்களுக்கு மனம்விட்டு அழுவதற்கென்றே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மிட்சுயி கார்டன் யோட்சுயா ஓட்டல் தனி அறைகளை வாடகைக்கு விடுகின்றது.
இந்த அறைகளை முன்பதிவு செய்துவிட்டு தனியாக வரும் சில பெண்கள் மூடிய கதவுக்குள் தனிமையில் அமர்ந்து வாய்விட்டும், மனம்விட்டும் அழுதுவிட்டு போகின்றனர். கண்ணீர் வராதவர்களுக்கும் அருவியாக கண்ணீரை சுரக்க வைக்கும் சாதனங்களும் இந்த அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. மிகுந்த சோகத்தை வரவழைக்கக்கூடிய கார்ட்டூன் மற்றும் சினிமா படங்களையும் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
’நான் மிட்சுயி கார்டன் யோட்சுயா ஓட்டல் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு அழுது விட்டு வருகிறேன்’ என்பது வெளி உலகுக்கு தெரியாத வகையில், அழுது, ஒப்பாரி வைத்து முடிந்தவுடன் கண்களில் இட்டுக்கொள்ளும் ‘ஐ லைனர்’ உள்ளிட்ட மேக்கப் சாதனங்களும் இங்குண்டு என்பது விசேஷம்.