ஒரிஜினல் லைசென்ஸ் விவகாரம் – ஐகோர்ட் புதுக் கருத்து!

ஒரிஜினல் லைசென்ஸ் விவகாரம் – ஐகோர்ட் புதுக் கருத்து!

அசல் ஓட்டுநர் உரிமம் இருந்தும் அதை ஆய்வின்போது வைத்திருக்கவில்லை என்றால் அதை தண்டனைக்குரிய குற்றமாக கருதமுடியாது என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரஜீந்தர் சிங் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு சட்டவிரோதமானது. ஏனெனில் சரக்கு வாகன ஓட்டிகளிடம் அசல் உரிமத்தை வாகன உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டுதான் பணி வழங்குகின்றனர். இவர்களின் அசல் ஓட்டுநர் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருந்து சரக்குப் பொருட்கள் பல மாநிலங்களுக்கும் செல்வதால் தகுதியான ஓட்டுநர்களைத்தான் எங்களது வாகனங்களுக்கு நியமி்க்கிறோம். தொலைதூர பயணங்களின்போது வாகன ஓட்டிகளின் உடைமைகள் திருடுபோகவோ அல்லது தொலையவோ வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் அசல் உரிமம் இல்லை என்றால் அதன்மூலம் ஏராளமான சட்ட சிக்கல்கள் ஏற்படும். மேலும் வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே உள்ள ஒரே பிணைப்பு அசல் ஓட்டுநர் உரிமம் மட்டுமே. ஆகவே செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் வழக்கறிஞர் எஸ்.கோவிந்தராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது நீதிபதிகள், ‘‘வெளிநாடுகளுக்கு செல்ல அசல் பாஸ்போர்ட் அவசியம் என்பது போல வாகன ஓட்டுநர்களுக்கும் அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம் என்பதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பி இதனால் ஏற்படும் இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்றனர்.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘அசல் ஓட்டுநர் உரிமம் பெறாமலே வாகனம் ஓட்டுவது என்பது சட்டப்படி தவறு. ஆனால் அசல் ஓட்டுநர் உரிமம் பெற்றுவிட்டு, அதை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றவர்களுக்கும் 3 மாத சிறை தண்டனை என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அதற்கு சட்டத்திலும் இடமில்லை’’ என்றார்.

விரிவான தீர்ப்பு

அதையடுத்து நீதிபதிகள், ‘‘அசல் ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனங்களை ஓட்டினால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். அதன்படி அவர்களுக்கு அரசு அறிவித்தபடி 3 மாத சிறை தண்டனையை வழங்கலாம். ஆனால் அசல் ஓட்டுநர் உரிமம் இருந்து, அதை ஆய்வின்போது வைத்திருக்கவில்லை என்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகாது. எனவே அதற்கு சிறை தண்டனை விதிக்கத் தேவையில்லை. சட்டப்படி அபராதம் விதித்தால் போதுமானது என கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு வெளியிடப்படும் என்று கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

error: Content is protected !!