எக்கனாமிக்கல் எமெர்ஜென்சி! – பிரான்ஸில் பிரகடனம்!
பிரான்ஸ் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இங்கிலீஷ் கால்வாயை ஒட்டி அமைந்துள்ள ஒரு மேற்கு ஐரோப்பிய நாடாகும். கி.பி. 1789ல் நடந்த பிரெஞ்சு புரட்சிக்குப் பின் நெப்போலியனால் ஆளப்பட்ட இந்நாடு அதன் பின் இன்று வரை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்ட இந்த நாட்டில் கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இதன் தலைநகரம் பாரீஸ். அறிவியல் முன்னேற்றத்திலும் அதன் புரட்சியிலும் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சித் துறைகளிலும் இந்த நாடு உலகிற்கு பல நன்மைகளை தந்துள்ளது. ஜி8 கூட்டமைப்பு நாடுகளின் ஒரு அங்கமாகக் திகழும் பிரான்சின் பொருளாதாரம் உலகளவில் 6வது இடத்தில் இருக்கிறது. இங்கு பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ. யூரோவின் மதிப்பு உலகிலேயே அதிகம்
இந்நிலையில் பிரான்சில் சமூக, பொருளாதார கட்டமைப்பை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்ட தாகவும், பொருளாதார அவசர நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.பாரிசில் இன்று நடந்த தொழிலதிபர்களுடனான ஆண்டுக் கூட்டத்தில் இதுபற்றி பேசிய அவர், பிரான்சில் நிலவி வரும் கடுமையான பொருளாதார பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை போக்குவதற்கான பல்வேறு பொருளாதார மீட்சி திட்டங்களை வெளியிட்டார்.
குறிப்பாக, தொழிலாளர்களை அரவணைத்து செல்லக்கூடிய தொழில் கொள்கைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவான முறையில் புதிய பயிற்சிகளை வழங்கவும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும் புதிய திட்டங்களை அறிவித்தார்.
ஆன்லைன் பொருளாதாரம், உலகளாவிய அதிவேக பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடைய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த புதிய பொருளாதார சீர்திருத்தங்களை பொருளாதார அவசர நிலை பிரகடனமாக கருதுவதாகவும் அதிபர் ஹாலண்டே தெரிவித்தார்.