உயர் கல்வியில் தரம் எப்படி உயரும் ?

உயர் கல்வியில் தரம் எப்படி உயரும் ?

நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தான் பங்கேற்கும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் உரையாற்றும் பொழுதெல்லாம் உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் இருநூறு இடங்களில் ஒன்றைக்கூட இந்தியப் பல்கலைக்கழகங்கள் பெற முடியவில்லை என்று ஆதங்கப்படுகிறார். இந்த ஆதங்கம் முதல் குடிமகனுக்கு மட்டுமல்ல, சராசரி இந்தியனுக்கும் கூடத்தான்
edit - education owl 16
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட 659 பட்டமளிக்கும் உயர்கல்வி நிறுவனங்களையும், 33,000 கல்லூரிகளையும், சுமார் 2.6 கோடி மாணவர் சேர்க்கையையும் உள்ளடக்கிய உலகின் இரண்டாவது மிகப் பெரிய உயர்க்கல்வி அமைப்பைக் கொண்ட நம்மால் முதல் இருநூறு இடங்களில் ஓர் இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் கல்வியாளர்களிடமும், ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும், குறிப்பாக பெற்றோர்களிடமும் இல்லாமல் இல்லை.

30 சதவீத மதிப்பெண் கற்பித்தலுக்கும், 30 சதவீத மதிப்பெண் ஆராய்ச்சிக்கும், 30 சதவீத மதிப்பெண் ஆராய்ச்சி சார்ந்த வெளியீடுகளுக்கும், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர், மாணவர் மற்றும் அதன் ஆராய்ச்சி மீது உலகளாவிய பார்வைக்கு 7.5 சதவீத மதிப்பெண்ணும், புதுமைகளுக்கு 2.5 சதவீதம் என 100சதவீத மதிப்பெண்களை அளவுகோலாக வைத்து, ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் மேற்கண்ட பிரிவில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

பல்கலைக்கழகங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. 2013-14ம் ஆண்டுக்கான பட்டியலில் முதல் பத்து இடங்களில் 7 இடங்களை அமெரிக்க பல்கலைக்கழகங்களும், 3 இடங்களை இங்கிலாந்து பல்கலைக்கழகங்களும் பெற்றுள்ளன.

ஆசிய பல்கலைக்கழகங்களில் ஜப்பானின் டோக்கியோ பல்கலைக் கழகம் 23வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி.- டில்லி, கான்பூர், கராக்பூர், ரூர்கி ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. அதுவும் 226-400க்குள் இடைப்பட்ட இடங்களை மட்டும்தான் பிடிக்க முடிந்துள்ளது.

சுதந்திரம் அடைந்திருந்தபோது வெறும் 26 பல்கலைக் கழகங்களையும், 695 கல்லூரிகளையும் மட்டுமே கொண்டிருந்த உயர்கல்வித் திட்டம் இன்று எண்ணிக்கையில் உயர்ந்துள்ள போதும், தரம் என்கின்றபோது நாம் எப்படித் தடுமாறுகிறோம் என்பதன் வெளிப்பாடுதான் இந்த பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல். கற்பித்தல், ஆராய்ச்சி, ஆராய்ச்சி சார்ந்த வெளியீடு என்ற பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய பணிகளின் அடிப்படையில் தரப்பட்டியல் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நம் பல்கலைக்கழகங்கள் இப்பணிகளை செய்யவில்லையா என்பதுதான் நம்மிடம் எழும் மிகப் பெரிய கேள்வி.

கற்பித்தலுக்குத் தேவை சிறந்த பேராசிரியர்கள். புகழ்பெற்ற அமெரிக்க நாட்டுப் பல்கலைக்கழகமான “ஸ்டான்போர்டு’ தன் பல்கலைக்கழகத்தில் இத்தனை பேராசிரியர்கள் நோபல் பரிசு பெற்றவர்கள், புக்கர் பரிசு பெற்றவர்கள் என உலகப் புகழ் மிக்க பரிசு பெற்றவர்களையெல்லாம் அவர்களின் பேராசிரியர்கள் என பெருமிதம் கொள்கிறது. நாம் நோபல் பரிசு பெற்றவர்களை பேராசிரியர்களாக நியமிக்கா விட்டாலும், குறைந்த பட்சம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் திறன் பெற்று விளங்குபவர்களை நியமித்தாலே நாம் முன்னிலை பெறலாம்.

தன் தாய் மொழியில் கூட சரியாக எழுதவோ பேசவோ தெரியாதவர்களெல்லாம் பேராசிரியர்களாக வந்து விட்ட நிலையில், இவர்களிடம் கற்பித்தல் திறனை நாம் எப்படி எதிர்பார்க்க இயலும்?

கற்பித்தல்தான் இப்படி என்றால், ஆராய்ச்சி எப்படி? 10,781 பி.எச்டி. முனைவர்களை 2008-09ஆம் ஆண்டு உருவாக்கிய நம் இந்திய பல்கலைக்கழகங்கள், 2011-12ஆம் ஆண்டு 16,093 பி.எச்டி. முனைவர்களை உருவாக்கி எண்ணிக்கையை உயர்த்தி காட்டியுள்ளதை கண்டு, அவசரப்பட்டுப் பாராட்ட வேண்டாம். “இந்திய பல்கலைக்கழகங்கள் தரமற்ற பி.எச்டி. முனைவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறிவிட்ட’தாக புகழ்பெற்ற கல்வியாளர் ராஜ்புட் சாடுகிறார். இதை நம்மால் மறுக்க முடியுமா?

ஆய்வறிக்கையில் கையெழுத்து மட்டும் போடுவதற்கு, ஆய்வறிக்கையை முழுமையாக எழுதுவதற்கு, புள்ளி விவரங்களை அலசுவதற்கு, பிழை திருத்துவதற்கு, வாய்மொழி தேர்வை மிக வேகமாக நடத்தி குறுகிய காலத்தில் பி.எச்டி. முனைவர் பட்டம் பெறுவதற்கு என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக மெனு போட்டு பணம் ஈட்டும் பலர் நம் பல்கலைக்கழகங்களில் வலம் வருவதைப் பார்க்க முடிகிறது.

2009ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு, பி.எச்டி. ஆய்வுப் படிப்பிற்கான தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு, 20 விதிகளை உள்ளடக்கிய ஓர் அறிவிப்பாணையை வெளியிட்டு அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த விதிகளை எந்த பல்கலைக்கழகமும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல்கலைக்கழகங்களைப் பொறுத்த வரை பிஎச்.டி. அவர்களுக்கு வருமானத்தை கொடுக்கின்ற வியாபாரம்.

மொழியியல் ஆராய்ச்சிக்காக துவக்கப்பட்ட “திராவிடியன் பல்கலைக்கழகம்’ அதற்கு சம்பந்தமே இல்லாத பல துறைகளில் பி.எச்டி. சேர்க்கையை நடத்தி, இரண்டே ஆண்டில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பிஎச்.டி. பட்டம் வழங்கி “சாதனை’ படைத்துள்ளது. இப்பொழுது இதை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்திய பல்கலைக் கழக பேராசிரியர்கள் மற்ற பல்கலைக்கழக பேராசிரியர்களோடு இணைந்து கூட்டு ஆராய்ச்சியில் (இர்ப்ப்ஹக்ஷர்ழ்ஹற்ண்ஸ்ங் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட்) மேலை நாட்டுப் பேராசிரியர்களைப் போல அதிகளவில் ஈடுபடுவதில்லை. கூட்டு ஆராய்ச்சியின் வாயிலாக பல அரிய கண்டுபிடிப்புகள் சாத்தியம் என்பதை நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியலிலிருந்தே நாம் அறியலாம்.

நோபல் பரிசு பெற்ற பலர், தங்களுடைய கூட்டு ஆராய்ச்சிக்காக இப்பரிசு கிடைத்ததை கண்டு பெருமிதம் கொள்கின்றனர். சான்றாக, இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக் கழகபேராசிரியரும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரும், கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்களும் இணைந்து நடத்திய கூட்டு ஆராய்ச்சியின் மூலம் வெளிவந்துள்ள கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

இதைப்போல், என்றைக்கு ஒரு ஐ.ஐ.டி (ஐ.ஐ.ப.) பேராசிரியரும், ஒரு ஐ.ஐ.எஸ்.சி. (ஐ.ஐ.நஸ்ரீ) பேராசிரியரும், பல்கலைக்கழக பேராசிரியர்களோடு இணைந்து கூட்டு ஆராய்ச்சியிலீடுபடுகின்றார்களோ அன்றுதான் நம் ஆராய்ச்சியின் தரம் உயர்ந்து, உலகை நம் பக்கம் திரும்பி பார்க்க வைக்க முடியும்.

ஐ.எல்.ஓ. (ஐ.க.ஞ.) புள்ளி விவரப்படி, 2020ஆ ம் ஆண்டில் 116 மில்லியன் பணியாளர்கள் 20 முதல் 24 வயது நிலையில் இந்தியாவில் இருப்பார்கள். நம் பல்கலைக்கழகங்களுக்கு இவர்களை அறிவுச் சார்ந்த, தொழில்நுட்பமிக்க பணியாளர்களாக மாற்றுவது என்பது மிகப் பெரிய சவாலாக அமையும். இச்சவாலை சந்திக்க, தகுந்த மாணவர் ஆசிரியர் விகிதம், உள்கட்டமைப்பு வசதி போன்றவை இருத்தல் அவசியம். உலக தரவரிசைப்பட்டியலில் முன்னணி பெற்றுள்ள பல்கலைக்கழகங்கள் எட்டு மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகித அடிப்படையில் அமைத்துள்ளன.

ஆனால் இந்தியாவில் ஐ.ஐ.டி. போன்ற முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில்கூட ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது என்றால், அரசு சார் உயர்கல்வி நிறுவனங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

பல்கலைக்கழக நூலகமும்,ஆய்வகங்களும் பல்கலைக் கழகத்தின் இரு கண்கள். முன்னணி பல்கலைக்கழகத்தின் நூலக வசதிகளையும், ஆய்வகங்களையும் பார்க்கின்றபோது நாம் மிகவும் பின்தங்கியே உள்ளோம். உதாரணத்திற்கு “ஸ்டான்போர்ட்’ பல்கலைக்கழகம், 8.5 மில்லியன் புத்தகங்களையும், இதழ்களையும், 1.5 மில்லியன் மின்னணு புத்தகங்களையும் கொண்டுள்ளது. மேலும் இப்பல்கலைக்கழக நூலகம் ஆசிரியர்கள், மாணவர்களின் தகவல் தேவையை கருதி 2010-2011ஆம் ஆண்டு மட்டும் 900க்கும் மேற்பட்ட பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளது.

இத்தகைய வசதிகள் இந்திய பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தினால்தான், நம் பேராசிரியர்கள் தரமான மற்றும் புகழ் பெற்ற இதழ்களில் தங்களுடைய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க இயலும். தரமான புகழ் பெற்ற இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியானால்தான், அக்கட்டுரைகள் அத்துறையைச் சேர்ந்த பல பேராசிரியர்களால் சுட்டிக்காட்ட (தங்ச்ங்ழ்) முடியும்.

உயர்கல்வியில் கற்பித்தல், ஆராய்ச்சி, ஆராய்ச்சி சார்ந்த வெளியீடு ஆகியவை தரமானதாக இருந்தால்தான் அதை உயிருள்ள உயர்கல்வியாகக் கருத முடியும். இல்லாவிட்டால் நம் பல்கலைக்கழகங்கள் உடல் என்ற கட்டிடங்களை மட்டும்தான் சுமந்து நிற்கும்.

நம் உயர்கல்வி உயிர்பெற கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைவரும் ஒருங்கிணைந்து நல்ல கல்வித் திட்டங்களை உருவாக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என்பதை உணர வேண்டிய தருணம் இது.

சே.சுவாமிநாதன்
(தலைவர், தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு.)

error: Content is protected !!