இபைலிங் செய்பவர்கள் ஸ்பீடு போஸ்ட் மூலமும் கணக்கை அனுப்ப வேண்டும் – வருமானவரித்துறை
ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கை இபைலிங் செய்பவர்கள் தங்கள் கணக்கு விவரத்தை பெங்களூரில் உள்ள வருமானவரி தொகுப்பு அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இவ்வாறு அனுப்பப்பட்ட பல தபால்கள், மத்திய அலுவலகத்தை சென்றடையவில்லை. இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் பாதிக்கப்பட்டனர்.
எனவே தபாலில் அனுப்பும் நடைமுறையை மாற்றி, டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய உடனடி ரசீது வழங்குவது குறித்து வருமானவரித்துறை முடிவு செய்திருந்தது. அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே இதை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், நடப்பு ஆண்டுக்கான இபைலிங் செய்பவர்கள் பெங்களூர் அலுவலகத்துக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என வருமானவரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இபைலிங் மூலம் கணக்கு விவரம் தாக்கல் செய்வது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இபைலிங் நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணைய தலைவர் ஆர்.கே.திவாரி தெரிவித்தார்.