இன்ஜினீயரிங் சேர மே 3–முதல் வினியோகம்; விண்ணப்பிக்க மே 20–ந்தேதி கடைசி நாள்!
இன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 59 மையங்களில் மே 3–ந்தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20–ந்தேதி கடைசி நாள்.அண்ணா பல்கலைக்கழகம் 2 லட்சம் இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் 1 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விண்ணப்ப கட்டணம் ரூ.500 மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் சாதி சான்றிதழ் ஜெராக்ஸ் கொடுத்தால் அவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டுமே. இன்ஜினீயரிங் விண்ணப்பிக்க உள்ள மாணவ–மாணவிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள் இப்போதே அதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் பெற்று வைத்துக்கொள்ளலாம். அதுபோல நேட்டிவிட்டி சான்றிதழும் பெற்று வைத்திருத்தல் நல்லது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு இன்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் இன்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி இன்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 620 இன்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2 விதமாக நடைபெற உள்ளது. அதாவது மாணவர் சேர்க்கை இடங்களில் அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் என்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியில் உள்ள இடங்களில் 65 சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் (அரசு ஒதுக்கீட்டுக்கு) கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். பொதுவான கல்லூரிகள் மீதம் உள்ள 35 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் மாணவர்சேர்க்கையை அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளாலாம். அண்ணா பல்கலைக்கழகம் நடத்தம் மாணவர்சேர்க்கை தான் பெரிய அளவிலானதாகும்.
அவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே மாதம் 3–ந்தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 59 மையங்களில் கொடுக்கப்படும். விண்ணப்பங்கள் மே மாதம் 20–ந்தேதி வரை கொடுக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்கவும் மே 20–ந்தேதி தான் கடைசி நாள். இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் 2½ லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து தயாராக வைத்துள்ளது. கலந்தாய்வு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இது நேற்று அதிகாரப்பூர்வமாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.