இதுதான் 49-ஓ திரைப்படம்! கவுண்டமணி கல கல பேச்சு விவரம் + ஆல்பம்

இதுதான் 49-ஓ திரைப்படம்! கவுண்டமணி கல கல பேச்சு விவரம் + ஆல்பம்

80-களில் தொடர்ந்து பல வருடங்களாக காமெடி தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த கவுண்டமணி சில வருடங்களாக இடைவெளி விட்டிருந்தார். அதன் பின் ’49-ஓ’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இயற்கை விவசாயம் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் கவுண்டமணிதான் விவசாயியாக நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் அனைத்தும் முடிந்து இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. கௌதம் மேனனிடம் பயின்ற ஆரோக்கிய தாஸ் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.


நேற்று நடந்த இவ்விழாவில் கவுண்டமணி பேசியதிலிருந்து “இந்தப் படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் என்கிட்ட வந்து கதை சொன்னார். ஒரு வருஷமா அலைஞ்சார். நான் ஒரு நாள் அவர்கிட்ட, ‘முன்னாடி விட்ருங்க. பின்னாடியும் விட்ருங்க. நடுவுல ரெண்டே ரெண்டு லைன்ல கதை சொல்லுங்க’ன்னு சொன்னேன்.. ‘ஆறடி தாய் மண்ணு’ன்னு சொன்னார். அதைக் கேட்டுட்டு நான் ஒத்துக்கிட்டேன். ‘தயாரிப்பாளர் யாரு?’ன்னு கேட்டேன். ‘டாக்டர் சிவபாலன்’னு சொன்னார். ‘அவரை அழைச்சிட்டு வாங்க’ன்னேன். அழைச்சிட்டு வந்தார். அவர்கிட்ட ‘உங்களுக்குக் கதை பிடிச்சிருக்கா?’ன்னு கேட்டேன். ‘பிடிச்சிருக்கு’ன்னு சொன்னார். ‘தயாரிப்பீங்களா?’ன்னு கேட்டேன். ‘நிச்சயம் தயாரிப்பேன்’னு சொன்னார். இப்போ எடுத்து முடிச்சிட்டார்.அவரை ரொம்பப் பாராட்டணும். ஏன்னா டப்பாங்குத்து, கும்மாங்குத்துன்னு படம் எடுத்துக்கிட்டிருக்குற இந்த நேரத்துல இப்படியொரு கதையை தேர்வு செய்ததுக்கு.. இளம் இயக்குநர் ஆரோக்கியதாஸ்.. ரொம்ப முற்போக்கான வசனங்களையெல்லாம் எழுதியிருக்கிறார். அவருக்கும் ஒரு பாராட்டு தெரிவிக்கணும்..

மியூஸிக் டைரக்டர் கே.. அவர் பெயர் மாதிரியே கேக்குற மாதிரி மியூஸிக் போட்டிருக்காரு. பாடலாசிரியர் யுகபாரதி இந்த யுகத்துக்கு என்ன எழுதணுமோ அதை எழுதியிருக்காரு. அதை தேனிசா செல்லப்பா பாடியிருக்காரு. கேமிராமேன் கருப்பையா.. பேருதான் கருப்பையா.. ஆனால் படத்தை கலர்புல்லா எடுத்திருக்காரு. டான்ஸ் மாஸ்டர் சங்கர்ன்னு ஒருத்தர். எனக்கெல்லாம் ஆடவே வராது. ஆடிட்டிருக்கும்போது பக்கத்துல ஆடுற பொம்பளைங்க மேல விழுந்து கைய, காலை மிதிச்சிருவேன். ‘ஸாரி’ சொல்வேன். ‘பரவாயில்லை’ன்னுவாங்க. ‘நீங்க போய் கொஞ்சம் உக்காருங்க. நான் ஆடிப் பார்த்துக்குறேன்’னுவேன். ‘இல்ல ஸார். வேணாம்’னுவாங்க. ‘இல்லம்மா.. திரும்ப நின்னீங்கன்னா மறுபடியும் காலை மிதிச்சிருவேன்’னு சொல்வேன்.. எப்படியோ என்னைய ஆட வைச்சிருக்காங்க.

அப்புறம் என் கூட நடிச்ச திருமுருகன், மூணாறு ரமேஷ், விசாலினி, வைதேகி எல்லாருக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். தயாரிப்பாளர் கவுன்சில்ல இருக்குற மொத்தப் பேருக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். ஏன்னா அத்தனை பேருக்கும் பெயர் சொல்லி தேங்க்ஸ் சொல்லணும்னா விடிஞ்சிரும். பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.. இங்க வந்திருக்கிற எல்லாருக்கும் ஒரே முறைல வணக்கம் சொல்லிக்கிறேன்..!
IMG_5386
எனக்கு முன்னாடி நம்ம சத்யராஜ் ரொம்ப நேரமா பேசி பிச்சி எடுத்துட்டாரு. அப்புறம் சிவகார்த்திகேயனும் நல்லா பேசிட்டாரு. இதுக்கு மேல நான் பேசினா அது எடுபடாது. படத்துல வேண்ணா காமெடி பண்ணிக்கலாம். இந்தப் படத்தோட கதையைப் பத்தி சொல்லணும்னா.. 2 மணி நேர படத்தை யுகபாரதி இரண்டு வரிகளில் சொல்லியிருக்கார். ‘விவசாயம் இல்லைன்னா.. உலகம் ஏதுடா..? உயிர் ஏதுடா..? பல கட்டடங்கள் கட்ட வயல்காட்டை அழிச்சாங்க’ன்னு.! இதுக்கென்ன அர்த்தம்..?

விவசாயமும், விவசாயிகளும் நம்ம நாட்டுக்கு அவசியம் தேவை. விவசாயி இல்லைன்னா நாம உயிர் வாழ முடியாது. நாம சாப்பிடுற சாப்பாட்டை யார் தர்றது..? விவசாயிகள் அழியக் கூடாதுன்ற புரட்சிகரமான கதையை எழுதியிருக்காங்க. ஆனால், அந்த விவசாயிக்கு அந்த நிலம்தான் மானம், புகழ், உயிர், பெயர், புகழ் எல்லாம். அந்த நிலத்தை விட்டுறக் கூடாது. அது கால் ஏக்கர், அரை ஏக்கர், முக்கால் ஏக்கரா இருந்தாலும் சரி.. அதுலதான் அவங்க வாழ்க்கை. அதுலதான் விவசாயம் பண்ணணும்..ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அடுத்த வருஷம் விளையும். ‘நல்லா விளையலை.. அதுனால நிலத்தை வித்துட்டேன்’னு சொல்லக் கூடாது.. ஒரு வியாபாரி, தன் வியாபாரத்துல நஷ்டமானாலும் அடுத்து வேற வியாபாரத்துல ஈடுபட்டு ஜெயிக்கிறான்ல.. அது மாதிரிதான்.அந்த விவசாயிகளைத் தேடி யார், யாரெல்லாம் வர்றாங்க.. அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் ஓனர்கள், தொழிலதிபர்கள், கார்பரேட் கம்பெனிக்காரங்க. எதுக்கு வர்றாங்க.. துக்கம் விசாரிக்கவா..? இல்ல சந்தோஷம் கொண்டாடவா..? அந்த நிலத்துல கால் ஏக்கரையாவது வாங்கிரலாம்னுதான்..

சில பேர் வித்துர்றாங்க. அந்த இடத்துல கட்ட்டம் கட்டிர்றாங்க. அப்புறம் விளை நிலம் எங்க இருக்கும்..? அப்புறம் எப்படி நாம சாப்பிடுறது..? அப்படியிருக்கக் கூடாது. ‘விவசாயிகள் விவசாயிகளாத்தான் இருக்கணும்’னு சொல்றதுதான் இந்த 49-ஓ திரைப்படம். இந்தத் திரைப்படம் விவசாயிகளைப் பத்தி சொல்ற கதை. நம்மூர் விவசாயிகளைப் பத்தி மட்டுமில்ல.. எல்லா ஊர் விவசாயிகளைப் பத்தியும் சொல்ற கதை. இந்திய விவசாயிகளைப் பத்தி மட்டுமில்ல.. அமெரிக்க விவசாயி, இங்கிலாந்து விவசாயி, ஆப்பிரிக்க விவசாயியாக இருந்தாலும் சரி.. விவசாயி விவசாயிதான்.

இதுல என்ன சேஞ்சு..? அமெரிக்கால ஜீன்ஸ் பேண்ட் போட்டு விவசாயம் பண்றான். நம்மூர்ல வேட்டி கட்டிட்டு விவசாயம் பண்றான். அதான் சேஞ்ச். அது நெல்லு விக்கிறவனா இருந்தாலும் சரி.. கொள்ளு விக்கிறவனா இருந்தாலும் சரி.. உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் சரி, ஒரு விவசாயியோட நிலத்தைக் காப்பாத்தணும். அப்பத்தான் மக்கள் வயிறார சாப்பிட முடியும். இதுதான் 49-ஓ திரைப்படம்.

நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன். ‘49-ஓ’ படத்தைப் பத்தி மட்டுமே சொல்றேன். திஸ் இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம். நான் மறுக்கா மறுக்கா சொல்றேன். இந்தப் படத்தை தயவு செய்து யாரும் மிஸ் பண்ணிராதீங்க. நீங்க பேமிலியோட அவசியம் பார்க்கணும்.ஏன்னா அனைத்து அம்சங்களும் கொண்ட படம் இது. இதுவொரு மினி மீல்ஸ் மாதிரியான படம். ஹோட்டலுக்கு போயி மினி மீல்ஸ் சாப்பிட்டீங்கன்னா புளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், அப்பளம், கூட்டு, பொரியல், ஸ்வீட், காரம், பாயாசம்ன்னு இது அத்தனையும் சாப்பிட்டால் என்ன டேஸ்ட் வருமோ.. அது இந்த ‘49-ஓ’ படத்துல இருக்கு.நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன். அதிகமா பேச விரும்பலை. ‘49-ஓ’ திஸ் இஸ் பெஸ்ட் மூவி. எல்லாரும் மிஸ் பண்ணாம பாருங்க.. வந்த எல்லாருக்கும் நன்றி. வணக்கம்..!” என்றார்.

நன்றி : தமிழ்சினிடாக்

error: Content is protected !!